
Revathi Death News Police Booked Case Against Pushpa 2 Actor Allu Arjun : புஷ்பா வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2 தி ரூல். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பாளருக்கு ஏற்கனவே லாபத்தை கொடுத்துவிட்டது.
அதுமட்டுமின்றி ரூ.500 கோடி வரையில் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே தியேட்டர் ரைட்ஸ் மற்றும் தியேட்டர் அல்லாத உரிமை அதாவது ஓடிடி என்று ரூ.1085 கோடி வரையில் வசூல் குவித்து சாதனையை படைத்துள்ளது.
இதுவரையில் எந்தப் படமும் இப்படியொரு சாதனையை படைக்கவில்லை. இந்த நிலையில் தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக 12000க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது. இந்த நிலையில் தான் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்திற்கு ஹைதராபாத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி அதிகாலையில் வெளியான புஷ்பா 2 படத்தை பார்க்க ரசிகர்கள் நள்ளிரவு முதல் நீண்ட நேரம் தியேட்டர் வாசலிலேயே காத்திருந்த சம்பவம் இன்று நடைபெற்றது. அதுவும் ஹைதராபாத்தில் பிரபலமான திரையரங்கான சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதோடு, அல்லு அர்ஜூனும் அதிகாலையில் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள தியேட்டருக்கு வருகை தந்தார்.
இந்த நிலையில் தான் ரேவதி என்ற ரசிகை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் தில்சுக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (39). இவருடைய கணவர் பாஸ்கர் மற்றும் குழந்தைகள் தேஜ் (9) மற்றும் சான்வி (7) ஆகியோருடன் ஆர்டிசி சாலையில் உள்ள சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 படம் பார்க்க வந்துள்ளார்.
ஆனால், தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலி கட்டுப்படுத்த போலீசார் லத்தி சார்ஜ் செய்திருக்கிறனர். எனினும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் ரேவதி என்ற ரசிகையும் அவரது மகனும் மயங்கி விழுந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை உடனடியாக துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காலையில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் தான் இந்த சம்பவம் காலை முதல் சமூக வலைதளங்களில் பூகம்பமாக வெடித்த நிலையில் அந்த ரசிகை ரேவதியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், அல்லு அர்ஜூன், தியேட்டர் மேனேஜ்மெண்ட் மற்றும் பாதுகாப்பு டீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஹைதராபாத் சென்ட்ரல் சோன் காவல்துறை துணை ஆணையர் அக்ஷன்ஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜூன் மீது பிஎன்எஸ் சட்டப்படி 105, 118(1)r/w3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரை கைது செய்யவும் பல அமைப்புகளிடமிருந்து கோரிக்கை எழுந்து வருவதாகவும், நஷ்ட ஈடாக ரூ.10 கோடி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ரூ.1085 கோடி தியேட்டர் ரிலீஸூக்கு முன்னதாக வசூல் கொடுத்த புஷ்பா உலகம் முழவதும் ரூ.2000 கோடி வசூல் குவித்த படம் என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் 3ஆம் பாகமும் உருவாக இருப்பதாக இந்த படத்தின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.