
மலையாள திரையுலகின் லெஜண்ட் ஆக கருதப்படுபவர் மம்மூட்டி. இவர் கடந்த 1951-ம் ஆண்டு செப்டம்பர் 7ந் தேதி கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சந்திரூரில் பிறந்தார். மம்மூட்டியின் தந்தை பெயர் இஸ்மாயில் பணப்பரம்பில், தயார் பெயர் ஃபாத்திமா. மம்மூட்டியின் தந்தை இஸ்மாயில் ஆடை மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவரது தாய் இல்லத்தரசி. மம்மூட்டிக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். இதில் மம்மூட்டி தான் மூத்தவர். இவருக்கு 2 தம்பிகளும், மூன்று தங்கைகளும் உண்டு.
மம்மூட்டியின் தம்பிகள் பெயர் ஜகாரியா மற்றும் இப்ராஹிம் குட்டி. அதேபோல் அவரது மூன்று தங்கைகள் பெயர், அமீனா, சவுதா, ஷஃபீனா. கோட்டயம் குலசேகரமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தான் தொடக்கக் கல்வியை பயின்றிருக்கிறார் மம்மூட்டி. இதையடுத்து 1960-களில் இவரது குடும்பம் எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்தது. பின்னர் அங்குள்ள அரசுப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மம்மூட்டி, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பயின்றார்.
சட்டம் பயின்ற பின்னர் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக வேலை செய்தார் மம்மூட்டி. இதையடுத்து 1971-ம் ஆண்டு வெளியான 'அனுபவங்கள் பாளிச்சகள்' படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமானார். 1971-ல் முதன்முதலில் திரையில் தோன்றினாலும், 1980-ல் வெளியான 'வில்கானுண்டு ஸ்வப்னங்கள்' என்ற படத்தின் டைட்டிலில்தான் மம்முட்டியின் பெயர் முதன்முதலில் இடம்பெற்றது. எம்.டி. வாசுதேவன் நாயரின் திரைக்கதையில் ஆசாத் இயக்கிய அந்தப் படத்தில் 'மாதவன்குட்டி' என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். அன்று தொடங்கி சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் மம்மூட்டி.
மூன்று தேசியவிருதுகள், ஏழு கேரள மாநிலத் திரைப்பட விருதுகள் மற்றும் 13 பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள நடிகர் மம்மூட்டிக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை கடந்த 1998-ம் ஆண்டு வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. மம்மூட்டிக்கு கடந்த 1979-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவரது மனைவி பெயர் சுல்ஃபத் குட்டி. இந்த ஜோடிக்கு துல்கர் சல்மான் என்கிற மகனும், குட்டி சுருமி என்கிற மகளும் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் துல்கர் சல்மான் அமல் சுஃபியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மரியம் என்கிற பெண் குழந்தையும் உள்ளது. மம்மூட்டியின் மகள் குட்டி சுருமி, முகமது ரெஹன் சையத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
மம்மூட்டி சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கிறார். இவர் கேரளாவின் பிரபலமான சேனல்களில் ஒன்றான கைரளி டிவியின் சேர்மன் ஆவார். அந்த சேனலின் நிர்வாக இயக்குனராக தற்போதைய கம்யூனிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டாஸ் உள்ளார். கார்கள் மீதும் அலாதி பிரியம் கொண்டவர் மம்மூட்டி. அவரிடம் விண்டேஜ் கார்கள் முதல் லேட்டஸ்ட் மாடல் கார்கள் வரை ஏராளமான கார்கள் இருக்கின்றன. மம்மூட்டியை போல் அவரது மகனும் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருகிறார். சமீபத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளிவந்த லோகா திரைப்படம் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்து, அதிக வசூல் அள்ளிய மலையாள படம் என்கிற சாதனையையும் படைத்தது.