நயன் - விக்கி இரட்டை குழந்தை விவகாரம்! சிகிச்சை பெற்ற மருத்துவமனை எது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!

First Published Oct 14, 2022, 1:12 PM IST

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியிடம் விசாரணைக்குழு விசாரிக்குமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆகும் நிலையில், குழந்தை பிறந்தது எப்படி என ஒரு புறம் சர்ச்சை கிளம்பினாலும், மறுபுறம் அவர்கள் சட்டத்தை மீறி இதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் விக்கி - நயன் ஜோடி சிறை செல்ல நேரிடும் என்றெல்லாம் கூறி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத்துறை சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருந்தார். இந்தக்குழு நேற்று விசாரணையை தொடங்கியது.

இதையும் படியுங்கள்... தொடரும் வசூல் வேட்டை.. விக்ரம் படத்தின் மொத்த கலெக்‌ஷனையும் இரண்டே வாரத்தில் தட்டித்தூக்கிய பொன்னியின் செல்வன்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், இதுகுறித்து பேசுகையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சிகிச்சை பெற்ற மருத்துவமனை எது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அது எந்த மருத்துவமனை என்பதை வெளிப்படுத்தாத நிலையில், சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த குழு தேவைப்பட்டால் அவர்களிடமும் விசாரணை நடத்தும் என அவர் தெரிவித்தார். இனி வரும் நாட்களில் அதுபற்றிய அடுத்தடுத்த நகர்வுகள் தெரியவரும். இந்த விசாரணை அறிக்கை வந்த பின்னரே, அவர் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார்களா? அல்லது அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினார்களா? என்பது தெரியவரும்.

இதையும் படியுங்கள்... நயன்தாரா முதல் நாகார்ஜுனா வரை... சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ

click me!