
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பெரிய ஹீரோவாகவும் இருந்தார். இன்னும் சொல்லப் போனால் ரஜினி, கமலை விட அதிகமான ரசிகர்களை விஜயகாந்த் கொண்டிருந்தார்.
திரை வாழ்க்கையில் எவ்வளவு உச்சத்திற்கு சென்றாலும் வெகு சிலரே அனைவருடனும் எளிமையாக பழகுவர். அவர்களில் முதன்மையானவர் விஜயகாந்த். தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் என்ணற்ற உதவிகளை செய்துள்ளார். திரைத்துறையில் விஜய்காந்த் காலத்தில் இருந்த ஒருவர் கூட எனக்கு விஜயகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறமுடியாது. அந்தளவுக்கு அனைவருக்கு உதவியவர்.
தற்போது உச்ச நடிகர்களாக விஜய், சூர்யா போன்றோருக்கு கூட அவர்களின் திரை வாழ்க்கையில் விஜயகாந்த் பல உதவிகளை செய்துள்ளார். புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பல முன்னணி இயக்குனர்களை உருவாக்கி உள்ளார். பல நகைச்சுவை நடிகர்களையும், குணச்சித்திர நடிகர்களையும் அறிமுகம் செய்துள்ளார். மேலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக படம் வெற்றி பெற்றால் மட்டுமே சம்பளம் வாங்கி உள்ளார். பல படங்களுக்கு சம்பளம் வாங்காமலே விஜயகாந்த் நடித்து கொடுத்துள்ளார்.
திரையுலகில் உச்ச நடிகராக வலம் வந்தாலும், சினிமாவில் நடிக்க தொடங்கிய போது பல அவமானங்களை சந்தித்தவர் விஜயகாந்த். கருப்பாக இருந்தால் அவருக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. அனைத்து தடைகளையும் கடந்து தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் ப்ரேக்த்ரூவாக அமைந்த படங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆம். 1979-ம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய்காந்த். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்து. அகல்விளக்கு, நீரோட்டம், சாமந்தி பூ ஆகிய படங்களும் தோல்வியை சந்தித்தது. 1980-ம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார் விஜயகாந்த். கே.விஜயன் இயக்கத்தில் வெளியான இந்த படம் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முதல் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
சிவப்பு மல்லி (1981) மற்றும் ஜாதிக்கொரு நீதி (1981) போன்ற புரட்சிகர மற்றும் தீவிர கம்யூனிச சிந்தனைகளைக் கொண்ட படங்களில் நடித்தார்.இந்த படங்களில், அவர் கோபமான இளம் புரட்சிகர ஹீரோவாக நடித்தார்.
ஆனால் விஜயகாந்த் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாறிய படம் என்றால் அது சட்டம் ஒரு இருட்டரை படம் தான். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட்டானது. இந்த படம் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமெக் செய்யப்பட்டது.
தொடர்ந்து பல ஹிட் படங்களில் மற்றொரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது வைதேகி காத்திருந்தாள் படம். ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து மற்றொரு ப்ரேக் த்ரூ படமாக அமைந்த படம் என்றால் அது ஆபாவணன் இயக்கத்தில் வெளியான ஊமை விழிகள் படத்தை சொல்லலாம்.
1984-க்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார் விஜயகாந்த். உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன் என அடுத்தடுத்து பல பிளாக்பஸ்டர் படங்களை வழங்கினார். 90களில் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய அவருக்கு புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் மாநகர காவல், சத்ரியன் ஆகிய படங்களும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இதனிடையே ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் வெளியான சின்ன கவுண்டர் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. சேதுபதி ஐபிஎஸ், தமிழ் செல்வன் ஐஏஎஸ், கண்ணுப்பட போகுதய்யா, தவசி, சொக்கத்தங்கம், ரமணா, வல்லரசு என பல் பிளாக்பஸ்டர் படங்களில் அவர் நடித்துள்ளார்.