கடவுளை விட்டு நீண்ட தூரம்..
அது கடவுளுடன் தனக்கு ஒரு தூரம் ஏற்பட்ட நேரம் என்றும் சித்ரா குறிப்பிட்டார். "இப்படி எல்லாம் நடக்க நான் என்ன தப்பு செய்தேன்? யாரையாவது நான் காயப்படுத்தினேனா? ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளிடம் ஏதாவது சொல்லி அவர்கள் மனதை நோகடித்துவிட்டேனா? அது சாபமாக இருக்குமோ? இப்படி பலவாறு சிந்தனைகள் போகும். நமக்கு என்ன எழுதியிருக்கிறதோ அது நடந்தே தீரும். எந்தக் கடவுளை வேண்டினாலும் சோதனைகள் வரும். அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியைத்தான் கடவுள் கொடுக்கிறார். அது யாரோ ஒருவரின் மெசேஜ் மூலமாகவோ அல்லது வேறு வழியாகவோ நமக்குக் கிடைக்கும். சில நேரம் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம், யாரையும் பார்க்க வேண்டாம் என்று இருந்தேன். அந்த நேரத்தில் திருச்சூரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. தங்குவதற்காக ரூம் தேடியபோது, அது குருவாயூர் கோயில் நடைக்கு அருகில் அமைந்தது. பகவான் என்னை மீண்டும் அழைப்பதாகவே எனக்குத் தோன்றியது. அன்று நான் கோயிலுக்குப் போனேன். நீண்ட நேரம் அழுதுவிட்டுத் திரும்பி வந்தேன்," என்றார் சித்ரா.
"இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால், நம்முடன் இருப்பவர்களின் வாழ்க்கையும் கஷ்டமாகுமே தவிர, நாம் இழந்தது திரும்பக் கிடைக்கப் போவதில்லை. இது ஒரு கட்டத்தில் எனக்குப் புரிந்தது. என்னைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். நான் சோர்ந்து போனால், அவர்களுடைய வாழ்க்கையும் சோர்ந்து போகுமல்லவா? நாம் பல கனவுகளைக் காண்போம். அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால், ஒரே ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடும். கடவுளின் முடிவுதான் இறுதியானது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் திட்டமிடுவதையே நிறுத்திவிட்டேன். என்ன வருகிறதோ, அதை அப்போது எதிர்கொள்ள வேண்டும். நாளைக்கு என்று எதையும் சேர்த்து வைப்பதில் அர்த்தமில்லை. கனவு கண்டு கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை," என்றும் சித்ரா உருக்கத்துடன் கூறினார்.