
உலகளவில் இதுவரை எவரும் செய்திடாத சாதனையை செய்பவர்களுக்கு உலகப்புகழ்பெற்ற கின்னஸ் சாதனை விருது கிடைப்பதோடு, அவர்களின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெறும். நிறைய பேர் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்முடைய பேவரைட் நட்சத்திரங்கள் சிலர் படைத்த கின்னஸ் சாதனைகள் பற்றி பார்க்கலாம்.
ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார். அவர் தன்னுடைய வளர்ப்பு மகனான சுதாகரனுக்கு கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். மிகப்பெரிய அளவில் நடைபெற்ற திருமணம் என்கிற சாதனைக்காக ஜெயலலிதா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இந்த திருமணத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்களாம். அதற்கு முன்னர் குயின் எலிசபெத்தின் திருமணம் தான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற திருமணமாக இருந்திருக்கிறது. ஆனால் அந்த சாதனையை ஜெயலலிதா முறியடித்து இருக்கிறார்.
அந்த காலகட்டத்திலேயே சுமார் 100 கோடி அளவு செலவு செய்து ஜெயலலிதா இந்த திருமணத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் அக்கா மகனான சுதாகரனை 1995-ம் ஆண்டு திடீரென தன் வளர்ப்பு மகனாக தத்தெடுத்து தமிழ்நாட்டையே அதிர வைத்தார் ஜெயலலிதா.
அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்கு முன்னரே சுதாகரனுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்திக்கும் திருமணம் செய்து வைத்தார் ஜெயலலிதா. இந்தியாவிலேயே இப்படி ஒரு திருமணம் எங்கும் நடந்திருக்காது என சொல்லும் அளவுக்கு மிகபிரம்மாண்டமாக சுதாகரன் திருமணம் நடந்தது.
70 ஆயிரம் சதுர அடியில் பந்தல் அமைத்து, ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும்படியான பந்தி, ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு காஸ்ட்லியான பட்டுப் புடவைகள், தங்க நகைகள், மாப்பிள்ளையின் ஆடைக்கு மட்டும் 27 லட்சம்னு 1990-களிலேயே மிக பிரம்மாண்டமாக இந்த கல்யாணத்தை நடத்தி இருந்தார் ஜெயலலிதா.
அதுமட்டுமின்றி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பிரத்யேகமான இசை நிகழ்ச்சியும் இந்த திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த திருமணத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து விஐபிக்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் கலந்துகொண்டார்கள். அண்மையில் அம்பானி நடத்திய பிரம்மாண்ட திருமணத்தை அந்த காலத்திலேயே நடத்தி ஜெயலலிதா பிரம்மிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கோட் படத்தில் இவ்வளவு ஸ்பெஷலா? அப்போ 1000 கோடி வசூல் கன்பார்ம்!
நாதஸ்வரம் சீரியல்
தமிழ்நாட்டில் மெட்டி ஒலி சீரியலை பற்றி தெரியாத 90ஸ் கிட்ஸே இருக்க முடியாது. அந்த சீரியலின் இயக்குனர் தான் திருமுருகன். மெட்டி ஒலி முடிந்த பின்னர் அவர் சினிமாவில் எம் மகன் படத்தை இயக்கினார். அப்படமும் பெரிய ஹிட் ஆனது. அதன்பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் அவர் ரீ-எண்ட்ரி கொடுத்த சீரியல் தான் நாதஸ்வரம்.
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான வெற்றிகரமான சீரியலும் இதுதான். சரி இந்த சீரியல் எப்படி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது என்று தானே யோசிக்கிறீர்கள். நாதஸ்வரம் சீரியலின் 1000-வது எபிசோடை புதுவிதமாக படமாக்க வேண்டும் என யோசித்திருக்கிறார் திருமுருகன்.
நாதஸ்வரம் சீரியலின் 1000-வது எபிசோடு முழுக்க முழுக்க சிங்கிள் டேக்கில் எடுத்ததோடு மட்டுமின்றி, அதை நேரலையில் டெலிகாஸ்ட் செய்து சாதனை படைத்திருக்கின்றனர். எக்கச்சகமான ரிகர்சல்கள் செய்து, 2014-ம் ஆண்டு மார்ச் 5-ந் தேதி அந்த எபிசோடை படமாக்கி இருக்கிறார் திருமுருகன்.
காரைக்குடியில் படமாக்கப்பட்ட இந்த சீரியலின் 1000-வது எபிசோடு, சன் டிவியில் இரவு 7.30க்கு நேரலையில் ஒளிபரப்பானது. 23 நிமிஷம் 25 செகண்ட் திட்டமிட்டபடி சிங்கிள் டேக்கில் எடுத்து நேரலையில் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.
சிங்கிள் டேக்கில் இதுவரை நிறைய படங்கள் கூட வந்திருக்கிறது. அவையெல்லாம் இடையே தப்பு செய்தால் மீண்டும் முதலில இருந்து படமாக்கிவிடலாம். ஆனால் இது நேரலையில் ஒளிபரப்பானதால் தப்பு செய்தால் மொத்தமாக சொதப்பி இருக்கும். ஆனால் அனைவரும் பக்காவா நடித்து கின்னஸில் இடம்பிடித்துவிட்டார்கள்.
நாதஸ்வரம் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பானது. இந்த சீரியலை இயக்கியது மட்டுமின்றி இதில் ஹீரோவாகவும் கோபி என்கிற கதாபாத்திரத்தில் இயக்குனர் திருமுருகன் நடித்திருந்தார். அவர் நடித்த காட்சிகள் மீம் டெம்பிளேட்டுகளாகவும் மாறி சோசியல் மீடியாவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
சுயம்வரம்
கிரிதரிலால் நாக்பால் தயாரிப்பில் வெளிவந்த படம் சுயம்வரம். 24 மணிநேரத்தில் இப்படத்தை எடுத்து முடித்ததற்காக அவர் கின்னஸில் இடம்பிடித்து உள்ளார். 1999-ம் ஆண்டு தமிழில் ரிலீஸ் ஆன சுயம்வரம் திரைப்படம் 23 மணிநேரம் 58 நிமிடத்தில் 14 முன்னணி இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள், 30 பிரபல நடிகர்களை வச்சு படமாக்கி இருந்தார்கள்.
கிரிதரிலால் நாக்பால் எழுதிய கதையை சுந்தர் சி, பி வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்ராஜன் உள்பட 14 முன்னணி இயக்குனர்கள் இயக்கினார்கள். வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். காலையில் ஷூட்டிங் ஆரம்பித்து ஸ்பாட் எடிட் பண்ணி முடித்திருக்கிறார்கள்.
தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி, வித்யாசாகர் போன்ற பிரபலமான இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றி இருந்தார்கள். அவர்களை வைத்து ஒரே நாளில் பாடல், பின்னணி இசை ஆகியவை கம்போஸ் செய்து முடிக்கப்பட்டதாம். இந்தப்படத்தின் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது.
இதையும் படியுங்கள்... படுக்கைக்கு அழைத்தாரா மம்மூட்டி; நடிகை சொன்ன பதில் என்ன?