
2018 ஆம் ஆண்டு சின்மயி பிரபல கவிஞரான வைரமுத்து மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இது தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து #MeToo என்கிற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகத் தொடங்கியது. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். சின்மயி செய்த இந்த முன்னெடுப்பு பெண்கள் பலரிடமும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாகவும், அதே சமயம் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் தமிழ் திரையுலகத்தில் இருந்து சின்மயி ஒதுக்கப்பட்டார். பின்னணி பாடுவதிலிருந்தும், டப்பிங் பேசவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வேறு சில காரணங்கள் கூறப்பட்டாலும் வைரமுத்துவின் பிரச்சனை தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு தமிழில் பாடுவதற்கும் வாய்ப்புகள் தரப்படவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் சின்மயி கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் “முத்த மழை..” என்கிற பாடலை சின்மயி பாடிய பின் மீண்டும் கவனம் பெறத் தொடங்கினார்.
சின்மயி பாடுவதற்கு ஏன் தடைவிதிக்கப்பட்டது? என்பது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் சின்மயியுடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் வைரமுத்து மீது சின்மயி வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கை அமரன், “வைரமுத்து தங்கமான ஆளு அவரை ஏன்மா இப்படி தவறா பேசுற? அவர் மீது நீ குற்றம் சொல்லலாமா? அவர் ஒரு உத்தமமான ஆளு, அதிசய பிறவியான ஆளு என்று நக்கலாகக் கூறினார். வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது என்று கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் எல்லாம் நண்பர்கள்தான். ஆனால் நண்பர் என்பதற்காக அவர் செய்த தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியுமா? ஒரு பெண் தனக்கு நடந்த பிரச்சனைகளை பேசும் போது அதற்கு ஆதரவாகத் தான் பேச முடியும். சின்மயி பின்னணி பாடகியாக ஆவதற்கும், இந்தத் துறையில் வளர்வதற்கும் மிகுந்த கஷ்டப்பட்டுள்ளார். பின்னர் தனக்கு நடந்த அசிங்கத்தை வெளியில் சொன்ன பின்னர் அவள் வாழ்க்கையில் மிக கஷ்டம். அநியாயத்தை கேட்பதற்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாரே அவருக்கு ஆதரவாக இருப்பதற்கு நான் எப்போதும் தயார்” எனப் பேசினார்.
அவரின் இந்த காணொளி இணையத்தில் வைரலாக தொடங்கிய நிலையில், பலரும் கங்கை அமரனை விமர்சித்து வருகின்றனர். காப்புரிமை விவாகரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு இடையில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. கவிஞர் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாக சாடி பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்த விவகாரத்தில் இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனும் வைரமுத்துவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். தற்போது அந்தப் பிரச்சனையை மனதில் கொண்டே சின்மயிக்கு ஆதரவாக கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியிருப்பதாக கூறப்படுகிறது.