விவசாயிகளின் பிரச்சினைகளையும், லோன் பெயரில் வங்கிகள் செய்யும் அநியாயங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நல்ல எமோஷனல் டிராமாவாக கர அமைந்துள்ளது. படத்தின் கதைப்படி, கரசாமி (தனுஷ்) ஒரு திருடன். எம்.எல்.ஏ வீட்டில் திருடும்போது மாட்டிக்கொள்கிறான். டி.எஸ்.பி பிரபாகரன் (சூரஜ் வெஞ்சரமூடு) இந்த கேஸை விசாரிக்கிறார். ஆனால், கரசுவாமி ஸ்டேஷனிலிருந்தே அவரை அடித்துவிட்டு தப்பிக்கிறான். இனி திருடக்கூடாது என முடிவெடுத்து, மனைவி செல்லி (மமிதா பைஜு) உடன் ஹோட்டலில் வேலை பார்க்கிறான். ஆனால், சொற்ப வருமானத்தில் மெஸ் தொடங்க வங்கியில் லோன் கேட்க, நிலப் பத்திரம் கேட்கிறார்கள்.
சொந்த ஊருக்குப் போனால், அப்பா கந்தசாமி (கே.எஸ்.ரவிக்குமார்) அந்தப் பத்திரத்தை வைத்து டிராக்டர் லோன் வாங்கியிருப்பது தெரிகிறது. போர் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிக்கிறது. லோன் கட்டமுடியாததால் வங்கி நிலத்தை ஜப்தி செய்கிறது. இந்த அதிர்ச்சியில் அப்பா இறந்துவிட, சொந்த நிலத்தில் அவரை அடக்கம் செய்யக்கூட வங்கி அனுமதிக்கவில்லை. கடனை அடைத்தால் மட்டுமே நிலம் திரும்பக் கிடைக்கும் என்ற நிலையில், கரசுவாமி என்ன செய்தான் என்பதே கதை.