Nayanthara wedding : காதல் டூ கல்யாணம்... விக்கி - நயனின் காதல் கடந்து வந்த பாதை...!

First Published Jun 8, 2022, 1:45 PM IST

Nayanthara wedding : விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் நாளை நடைபெற உள்ள நிலையில், இவர்களது காதல் கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அஜித் -ஷாலினி, சூர்யா - ஜோதிகா ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட காதல் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தான். 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த தற்போது திருமண பந்தத்தில் இணைய தயாராகி உள்ளது. இவர்களது திருமணம் நாளை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. தற்போது இவர்களது காதல் கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காதல் மலர்ந்தது எப்போது?

விக்கி - நயன் இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தின் போது தான் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். நயன்தாராவை செல்லமாக தங்கமே என அழைக்கும் விக்கி, இப்படத்துக்காக அவரை வர்ணித்து எழுதிய தங்கமே பாடல் அவரின் காதலின் வெளிப்பாடாக இருந்தது. இப்படம் சக்சஸ் ஆனதைப் போல் அவர்களது காதலும் சக்சஸ் ஆனது. 

ரகசிய காதல் வெளிச்சத்துக்கு வந்தது எப்போது?

2015-ம் ஆண்டே இவர்கள் இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வரத் தொடங்கின. இருப்பினும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருவரும் இருந்து வந்தனர். இந்த ஜோடியின் காதல் வெளிச்சத்துக்கு வந்தது 2017-ம் ஆண்டு தான். சிங்கப்பூரில் நடந்த விருது விழா ஒன்றில் இருவரும் ஜோடியாக வந்து காதலை உறுதிப்படுத்தினர். அப்போது விருது வாங்க மேடை ஏறிய விக்னேஷ் சிவன், நயன்தாரா பற்றி பேசும்போது வெட்கப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறின.

சினிமாவிலும் ஜோடியாக சாதித்த விக்கி - நயன்

காதலைப்போல் சினிமாவிலும் இவர்கள் இருவரும் சக்சஸ்புல் ஜோடியாக வலம் வந்தனர். இவர்கள் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய நானும் ரவுடி தான் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை அடுத்து, இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர். இதன்மூலம் நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து வெற்றிகண்டனர். குறிப்பாக கூழாங்கல் திரைப்படம் சர்வதேச அளவில் பல்வேறு பட விழாக்களில் கலந்துகொண்டு இன்றளவும் விருதுகளை குவித்து வருகிறது.

இவர்கள் இருவரும் அண்மையில் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.66 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் அடித்தது. இப்படத்தில் நடிகை நயன்தாரா கண்மணி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இதுதவிர இவர்கள் இருவரும் இப்படத்தில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருந்தனர்.

டிரெண்டிங் ஜோடி ஆனது எப்படி?

இவர்கள் இருவரில் நயன்தாரா, சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். ஆனால் விக்னேஷ் சிவனோ எப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதனால் நயன்தாராவை பற்றி அவர் ஏதேனும் போஸ்ட் போட்டாளே லைக்ஸ் அள்ளும். குறிப்பாக இவர்கள் இருவரும் ஜோடியாக வெளிநாட்டுக்கு செல்லும்போதெல்லாம், தவறாமல் போட்டோ போட்டு ரசிகர்களை குஷி ஆக்கி  விடுவார் விக்கி. 

கல்யாணத்துக்கு ரெடி

கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே இவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. இதனை இருவரும் கையில் மோதரத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சூசகமாக அறிவித்திருந்தார் விக்கி. பின்னர் கடந்த நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக நடிகை நயன்தாரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போதிலிருந்தே இவர்களது திருமணம் எப்போது என்கிற கேள்வி எழுந்து வந்தது.

அதற்கு தற்போது தான் விடை கிடைத்துள்ளது. இந்த ஜோடி ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளது. திருமணத்திற்கு பின்னராவது நயன்தாராவை சமூக வலைதளங்கள் பக்கம் விக்கி அழைத்துவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Nayanthara : செல்போனுக்கு அனுமதி இல்லை... நயன் - விக்கி திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா?

click me!