
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வந்த புஷ்பா படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த படம் புஷ்பா 2: தி ரூல். ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பான் இந்தியா படமாக புஷ்பா வெளியானது.
புஷ்பா 2 வெளியாவதற்கு முன்னதாகவே ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து புதிய சாதனை படைத்தது. கடந்த 5ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு ஹைதராபாத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி அதிகாலை 4 மணிக்கு வெளியான புஷ்பா படத்தை பார்க்க ரசிகர்கள் நள்ளிரவு முதல் நீண்ட நேரம் தியேட்டர் வாசலிலேயே காத்திருந்த சம்பவம் நடைபெற்றது. அதுவும் ஹைதராபாத்தில் பிரபலமான திரையரங்கான சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதோடு, அல்லு அர்ஜூனும் அதிகாலையில் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள தியேட்டருக்கு வருகை தந்தார்.
இந்த நிலையில் தான் ரேவதி என்ற ரசிகை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் தில்சுக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (39). இவருடைய கணவர் பாஸ்கர் மற்றும் குழந்தைகள் தேஜ் (9) மற்றும் சான்வி (7) ஆகியோருடன் ஆர்டிசி சாலையில் உள்ள சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 படம் பார்க்க வந்துள்ளார்.
ஆனால், தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலி கட்டுப்படுத்த போலீசார் லத்தி சார்ஜ் செய்திருக்கின்றனர். எனினும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் ரேவதி என்ற ரசிகையும் அவரது மகனும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்களை உடனடியாக துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அல்லு அர்ஜூன், தியேட்டர் மேனேஜ்மெண்ட் மற்றும் பாதுகாப்பு டீம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தான் ஒரு வாரத்திற்கு பிறகு அல்லு அஜூனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
அல்லு அர்ஜூன் மீது பிஎன்எஸ் சட்டப்படி 105, 118(1)r/w3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சிக்காட்பள்ளி போலீசார் அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.
போலீசார் வீட்டிற்கு வந்து வெளியில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் ஹாயாக டீ கொடுத்து விட்டு அதன் பிறகு தான் போலீஸ் வாகனத்தில் ஏறி வந்துள்ளார். கைதுக்கு முன்னதாக அல்லு அர்ஜூன் மனைவி சினேகா ரெட்டியை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு சென்றார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேவதியின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் ரூ.25 லட்சம் நஷ்ட ஈடும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.