UPI Charges: யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? புதிய மசோதா குறித்து முழு விளக்கத்தை பார்க்கலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் முகமாக மாறியுள்ள யுபிஐ சேவையை தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், "இனி யுபிஐ மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வருமா?" என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இதற்கு காரணம், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் திருத்த மசோதா. இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள சில பரிந்துரைகள் யுபிஐ பயன்பாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
25
பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம்
இந்த திருத்த மசோதாவின் முக்கிய அம்சமாக, யுபிஐ மற்றும் RuPay மூலம் நடைபெறும் வணிக (Merchant) பரிவர்த்தனைகளுக்கு வணிக தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) விதிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது யுபிஐ மூலம் பெரும்பாலான பரிவர்த்தனைகள் கட்டணமின்றி நடைபெற்று வருகின்றன. ஆனால், எதிர்காலத்தில் குறிப்பிட்ட வகை வணிகப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிக்க சட்ட அடிப்படை உருவாக்கப்படலாம் என்பதே இந்த பரிந்துரையின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
எனினும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, தனிநபர் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு (P2P) யுபிஐ மூலம் பணம் அனுப்பப்படும் பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது. நண்பர்கள், உறவினர்கள் அல்லது குடும்பத்தினருக்கு கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணம் அனுப்புவது வழக்கம்போல இலவசமாகவே தொடரும். தினசரி சிறிய செலவுகளுக்காக யுபிஐ பயன்படுத்தும் சாதாரண வாடிக்கையாளர்களும் இந்த மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த பரிந்துரையின் தாக்கம் முக்கியமாக பெரிய வணிக நிறுவனங்களுக்கே இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.15 கோடிக்கும் அதிக வர்த்தக வருவாய் கொண்ட நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட வரம்புக்கு மேற்பட்ட Merchant யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.2% முதல் 0.3% வரை எம்டிஆர் வசூலிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ இறுதி அறிவிப்பு வெளியாகவில்லை.
55
புதிய விதிமுறைகள்
மிக முக்கியமாக, இந்த மாற்றம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போது இது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் இடம்பெற்றுள்ள ஒரு பரிந்துரை மட்டுமே. நாடாளுமன்றத்தின் ஒப்புதல், அரசின் இறுதி முடிவு மற்றும் என்பிசிஐ வெளியிடும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இவற்றின் பின்னரே புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். அதுவரை, பொதுமக்கள் பயன்படுத்தும் வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் தேவையற்ற குழப்பம் அல்லது அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.