
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை சில வங்கிகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கி வைக்கும் நிகழ்வு ஆங்காங்கே நடந்தேறிதான் வருகின்றன. அதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளும் பட்சத்தில் வங்கியின் அதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க முடியும். மேலும் வங்கி மற்றும் அரசின் பொதுவான சட்ட திட்டங்களை பின்பற்றாதவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், ஒரு சிலவற்றை நாம் பின்பற்றினால் அது போன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம்.
வங்கிக் கணக்கு முடக்கப்படுவதற்கான காரணங்கள், போலி பரிவர்த்தனைகள் முதல் சட்ட மற்றும் ஒழுங்கு மீறல்கள்வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். எந்த ஒரு விஷயத்தையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முறையாக செய்யும் பட்சத்தில் நம் மீது எந்த நடவடிக்கையும் எப்போதும் பாயாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கணக்கு ஏன் முடக்கப்படலாம் என்பதை புரிந்துகொள்வது அவசியமாகும். மேலு் நிதி நடவடிக்கைகளை சீராக நடத்த முன் நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முக்கியம் என்கின்றனர் மூத்த வங்கி அதிகாரிகள்.
சாதாரணமாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை எந்த வங்கியும் எளிதாக முடக்கி விடுவதில்லை. இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் வழிகாட்டுதல்களின்படி தனியார் மற்றும் அரசு வங்கிகளான பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிதி பாதுகாப்பு அளித்து வருகின்றன. மேலும் பண பறிமாற்றங்களையும் முதலீடுகளையும் ரகசியமாகவே வங்கிகள் வைத்துள்ளன. யாருடைய வங்கி கணக்கையும் யாரும் தெரிந்துகொள்ள முடியாத வகையில் வங்கிகள் ரகசியம் காக்கின்றன என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில் சில காரணங்களுக்காக வங்கிகள் தனது வாடிக்கையாளரின் கணக்கை முடக்கும் சூழலும் ஏற்படுகிறது. அதனை தெரிந்துகொண்டால் நமது வங்கி கணக்குகள் முடக்கப்படாமல் தப்பிக்கும்.
வங்கிகள் உங்கள் கணக்கில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் – போலி பரிவர்த்தனைகள், அடையாள திருட்டு போன்றவை – நடக்கின்றனவா என்பதை கண்காணிக்கின்றன. இந்த மாதிரி சந்தேகங்கள் இருந்தால், மேல்மட்ட அதிகாரிகள் தரப்பு பரிசோதனை செய்யும் வரை வங்கிகள் கணக்கை தற்காலிகமாக முடக்கலாம். சரியான கணக்கு வழக்குகளுடன் பண பறிமாற்றம் இருக்குமேயானால் இது போன்ற நடவடிக்கையில் இருந்து நாம் தப்பிக்கலாம். நேர்மையான பொருள் ஈட்டல், சரியான வரித்தாக்கல் ஆகியவை நம் வங்கி கணக்குகளை எப்போதும் பாதுகாக்கும் என்கின்றனர் வங்கி அதிகாரிகள்.
தனியார் வங்கிகளும் பொதுத்துறை அரசு வங்கிகளும் AML regulations படி செயல்பட வேண்டும். சந்தேகமான பரிவர்த்தனைகள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபாடு இருக்க வாய்ப்பு என்ற சந்தேகம் ஏற்படும் பட்டத்தில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கு உடனடியாக முடக்கப்படும். அதன் பிறகு நடைபெறும் விசாரணையின் போது உரிய ஆவணங்களையும், தகுந்த சான்றுகளையும் சமர்ப்பிக்கும் போது நமது வங்கிகணக்குகள் முடக்கத்தில் இருந்து விடுவிக்கப்படும்.
அடையாள சான்று புதுப்பிப்பு, வங்கி மிச்சம் கடன் நிலை, வங்கியுடன் உள்ள மோதல் போன்றவை தீர்க்கப்படாவிட்டால், வங்கி உங்கள் கணக்கை முடக்கலாம்.KYC போன்ற ஆவணங்கள் சரிபார்ப்புகளை சரியாகவும் வங்கிகள் கொடுக்கும் அவகாசத்திற்குள்ளும் நீங்கள் சமர்ப்பிக்கும் போது உங்கள் வங்கி கணக்குகள் எப்போதும் போல் இயங்கும். அதேபோல் வங்கிகளில் கடன் வாங்கியோர் அதனை அடைக்காமல் காலம் தாழ்த்தினால் வங்கிகள் வாடிக்கையாளரின் வங்கி கணக்கை உடனடியாக முடக்கி நடவடிக்கை எடுக்கும். இதனால் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். வங்கி கணக்குகளில் இருந்து பணபரிமாற்றம் தடைபடும்.
வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் ஏதேனும் சட்ட வழக்குகளில் சிக்கும் போது, அவர்களின் கணக்கு மீது நீதிமன்ற உத்தரவு இருந்தால், அந்த வழக்கு முடியும் வரை வங்கி கணக்கை முடக்கலாம். அதேபோல், காவல் துறை அல்லது அரசு விசாரணையின் ஒரு பகுதியாக உங்கள் கணக்கு விவரங்கள் தேவைப்படுமானால், வங்கிகள் அவற்றின் விரிவான விசாரணைக்கு துணைபுரியக் கணக்கை முடக்குவர். நிதி மோசடி, சிட் பண்ட் மோசடி போன்றவற்றில் சிக்குவோரின் வங்கி கணக்குகளை காவல்துறை மற்றும் நீதிமன்ற உத்தரவின் படி வங்கிகள் உடனடியாக முடக்கும். பின்னர் அந்த வழக்குகள் முடிக்கப்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகே எப்போதும் போல் வங்கி கணக்குகள் செயல்பாட்டுக்கு வரும்.
திடீரென பெரிதான பரிவர்த்தனைகள், செயலில் திடீர் வேறுபாடுகள், செலவிடும் முறைகளில் திடீர் மாற்றங்கள் போன்றவை கண்டறியப்பட்டால், வங்கி உங்கள் கணக்கை தடுப்புக்கருத்தாக முடக்கலாம். அதிக பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தும் போது அது குறித்த விவரங்களையும் ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தால் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது. இல்லையேல் ஆவணங்களை தயார் செய்து வைத்திருந்தால் வங்கி அதிகாரிகள் விரும்பும் போது அதனை அவர்களிடம் சமர்பிக்கலாம்.
வங்கி கணக்குகள் முடக்கப்படும் பட்சத்தில் உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்.முடக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள். அடையாள சான்றுகள் அல்லது முகவரி சான்றுகள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பியுங்கள். சட்ட வழக்கு தொடர்பான காரணமாக இருந்தால், வழக்குரைஞரை அணுகி தீர்வு காணுங்கள்.அரசு அல்லது காவல் துறை விசாரணை காரணமாக இருந்தால், தேவையான ஆவணங்களை வழங்கி விசாரணையில் ஒத்துழையுங்கள். நிதிநிலை பாதிக்கப்படாமல் இருக்க, உங்கள் வங்கிக் கணக்கை சரியாக பராமரித்து, தவிர்க்கக்கூடிய தவறுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து கணக்கு மற்றும் அதன் விவரங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும், SMS, Email Alerts ஆகிவற்றை செயல்படுத்தி வங்கியின் உத்தரவுகள் மற்றும் அப்டேட் தகவல்களை பின்பற்ற வேண்டியது கட்டாயம்.மாதம் ஒரு முறை bank statement-ஐ பார்த்து வரவு செலவு குறித்த விவரங்களை கணக்கிடவும். KYC ஆவணங்கள் நிரப்பப்பட்டுள்ளதா என உறுதி செய்யவும். Aadhaar, PAN, Address Proof ஆகியவை தற்போதையவைதானா என பரிசோதிக்கவும். உங்கள் வருமானத்தை சட்டப்படி அறிவிக்கவும். Self-employed அல்லது Salary ஆகியோருக்கு IT return தாக்கல் செய்வது அவசியம்.கடன் தவணைகளை தவறாமல் செலுத்தவும். EMI bouncing அல்லது Delay இருந்தால், வங்கியிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும். சந்தேகமுள்ள பரிவர்த்தனைகள் இருந்தால் உடனடியாக வங்கியுடன் தொடர்புகொள்ளவும்.தனியாரிடம் இருந்து அதிக பணம் வரும்போது "Source of Income" விளக்கம் தயாராக இருக்க வேண்டும்.