
தங்கள் வழக்கமான செலவுகளை நிர்வகிக்கவும், மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யவும் மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வருமானம் தேவை. தங்கள் ஓய்வுகாலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் தங்கள் செலவுகளை தாங்களே பார்த்துக் கொள்வதற்கும் இந்த வருமானம் உதவுகிறது.
ஆனால் இந்த வருமானத்தை பெற ஒன்று ஓய்வூதியம் பெற வேண்டும் அல்லது ஓய்வு காலத்தில் வருமானம் பெறும் வகையில் ஏதேனும் ஒரு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த சேமிப்பு திட்டங்களில் ஒரு முறை முதலீடு செய்து வட்டி வடிவில் வருமானத்தைப் பெறலாம். அத்தகைய வருமானம் ஒருவரின் முதலீட்டைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதால், மூத்த குடிமக்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளலாம்.
பெரும்பாலும், இத்தகைய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் மூத்த குடிமக்கள் வட்டி வடிவில் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவார்கள். அத்தகைய ஒரு சேமிப்பு திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் தான் அந்த திட்டம்.
இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் உத்தரவாத வருமானம் பெற முடியும். இதில் மூத்த குடிமக்கள் ஒரு முறை முதலீடு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு காலாண்டு ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2,46,000 வருமானம் பெறலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கு (SCSS) அடிப்படை அம்சங்கள்
இந்தத் திட்டம் 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டத்திற்கு பிறகு அதிக வட்டி வழங்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் ஒன்றாகும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிவில் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஒரு முறை முதலீடு ரூ. 1,000 ஆகும். அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் ரூ. 1.50 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்..
இந்தத் திட்டத்தில் ஒருவர் ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். அவருக்கு காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்தப்படும். ஒருவர் SCSS கணக்கை முன்கூட்டியே மூடலாம் அல்லது முதிர்வு தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.2,46,000 பெற வேண்டுமெனில் அவர் இந்த திட்டத்தில் ரூ.30 லட்சத்தை ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். 8.2 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு காலாண்டில் ரூ.61,500 காலாண்டு வட்டி தொகை கிடைக்கும்.
இதன் மூலம் ஒரு ஆண்டில், அவர் ரூ.2,46,000 பெறுவார். அந்த நபர் ஐந்தாண்டுகள் முழுவதுமாக இந்த திட்டத்தை தொடர்ந்தால், அவர்களின் ஆரம்ப முதலீட்டான ரூ.30 லட்சத்தில் ரூ.12 லட்சம் வருமானம் கிடைக்கும்.