RBI: நகை அடகு வச்சிருக்கீங்களா? பிரபல ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அபராதம்! முழு விவரம்!

Published : May 15, 2026, 09:18 PM IST

RBI: தமிழகத்தில் கிளைகள் வைத்துள்ள IIFL ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

PREV
13
IIFL ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அபராதம்

IIFL ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ₹3.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்கத்தை ஏலம் விட்டதில், கடன் தொகைக்கு மேல் கிடைத்த உபரிப் பணத்தை சிலருக்குத் திருப்பிக் கொடுக்காதது உட்பட, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (NBFC) ரிசர்வ் வங்கியின் சில விதிமுறைகளை மீறியதாக இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையில், இந்த அபராதம் மே 11, 2026 தேதியிட்ட உத்தரவின் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934-ன் கீழ் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை ஏலம் விட்டதில், கடன் தொகைக்கு மேல் கிடைத்த உபரிப் பணத்தை, குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் திருப்பிக் கொடுக்கத் தவறியுள்ளது' என்று ரிசர்வ் வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

23
அபராதத்துக்கு காரணம் இதுதான்

'Master Direction- Reserve Bank of India (Non-Banking Financial Company - Scale Based Regulation) Directions, 2023' என்ற விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நகைக்கடன் என்பது, அடகு வைக்கப்படும் தங்க நகைகள் அல்லது பொருட்களுக்கு எதிராக வழங்கப்படும் கடன். கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், கடன் கொடுத்தவர்கள் அடகு வைக்கப்பட்ட தங்கத்தை ஏலம் விட்டு நிலுவைத் தொகையை வசூலிக்கலாம். ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ஏலத்தின் மூலம் கடன் தொகைக்கு மேல் கிடைக்கும் எந்தவொரு உபரித் தொகையும் கடன் வாங்கியவருக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மார்ச் 31, 2025 நிலவரப்படி, அந்நிறுவனத்தின் நிதி நிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறியது தொடர்பான மேற்பார்வை கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களின் அடிப்படையில், ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது' என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

33
தமிழகத்தில் கிளைகள் வைத்துள்ள நிறுவனம்

அபராதம் விதிக்கும் முடிவை எடுப்பதற்கு முன், அந்நிறுவனம் நோட்டீஸுக்கு அளித்த பதில் மற்றும் நேரடி விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட வாய்மொழி வாதங்களையும் ரிசர்வ் வங்கி பரிசீலித்ததாகக் கூறியது. இந்த நடவடிக்கை "ஒழுங்குமுறை இணக்கக் குறைபாடுகளின்" அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும், இது வாடிக்கையாளர்களுடன் நிறுவனம் செய்துகொண்ட பரிவர்த்தனைகள் அல்லது ஒப்பந்தங்களின் செல்லுபடியாகும் தன்மையை பாதிக்காது என்றும் மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், 'இந்த அபராதம் விதிக்கப்பட்டது, அந்நிறுவனத்திற்கு எதிராக ரிசர்வ் வங்கி எடுக்கக்கூடிய வேறு எந்த நடவடிக்கையையும் பாதிக்காது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. IIFL ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிளைகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories