
பழங்காலத்தில் கடன் கொடுப்பதும் கடன் பெறுவதும் எளிதாக இல்லாத சூழல் நிலவியது. வங்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகே ஒருவரின் பொருளாதார நிலைக்கு தகுந்தாற்போல் கடன் வழங்கப்பட்டது. வாகனம் கடன், கல்விக்கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழிற்கடன் என பல்வேறு கடன்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், எல்லா கடன்களையும் எளிதாக அடைக்கும் வகையில் இஎம்ஐ எனப்படும் மாதத்தவணை முறை அமல்படுத்தப்பட்டது. கடன்களை திரும்ப கட்டுவதற்கு எளிதான வழிமுறைகள் உள்ளதால் பல்வேறு தரப்பினரும் கடன் பெற்று தங்களது தேவைகளை நிறைவேற்றிகொள்கின்றனர்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலரும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகளில் இருந்து பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் எடுத்து வருகின்றனர். மருத்துவம், திருமணம், கல்வி, வீட்டுப் பழுது மற்றும் பயணச் செலவுகள் போன்றவை காரணமாக பர்சனல் லோன் ஒரு முக்கியமான நிதி உதவியாக உள்ளது. மற்ற கடன்களை விட வட்டி அதிகம் என்றாலும் பர்சனல் லோன் கிடைப்பது எளிது என்பதால் பலரின் தேர்வாக இது உள்ளது. பர்சனல் லோன் என்பது ஒரு வங்கியிடமிருந்து அல்லது நிதி நிறுவனத்திலிருந்து, உங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பெறப்படும் ஒரு காப்புறுதி இல்லாத கடன் (Unsecured Loan) ஆகும்.
பர்சனல் லோனை எடுக்கும்போது, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் EMI (Equated Monthly Instalment) வடிவில் மாதந்தோறும் ஒரு தொகையை செலுத்தவேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த EMI தவறுவதால் பல தீவிரமான விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது நிதியை பாதுகாப்பதற்கும், தவறுகளைத் தவிர்ப்பதற்கும் உதவி செய்யும்.
ஒரே ஒரு EMI தவறினாலும் உங்கள் கடன் தரக் கணக்கு (CIBIL Score) சுமார் 50 முதல் 70 பாயிண்ட்கள் வரை குறையலாம். இந்த சுழற்சி உங்கள் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். அடுத்த முறை கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, வங்கி அதிக வட்டி வசூலிக்கலாம் அல்லது கடனையே மறுக்கலாம். வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட அனைத்தையம் சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருப்பது அவசியமாகிறது. இதனால் தனிநபர் மாதவணையை தவறாமல் கட்டுவது நல்லது.
EMI தவறினால், வங்கிகள் 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன. மேலும் அந்த தவறிய தொகைக்கு பின்வட்டி (penal interest) கட்டாயமாக வசூலிக்கப்படும். இது உங்கள் முழுமையான கடன் சுமையை அதிகரிக்க செய்து, நீண்ட கால நிதிச் சுமையை உருவாக்கும். இஎம்ஐ கட்டுவதற்கு தவறும் பட்சத்தில் மாத தவணை கட்டும் தொகையும் கட்டும் மாதங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சூழலும் ஏற்படும்.
உங்கள் கடன் தவறு 90 நாட்களுக்கு மேல் செல்லும்போது, அது Non-Performing Asset (NPA) என வகைப்படுத்தப்படுகிறது. இது வங்கியும், கிரெடிட் புரோ நிறுவனங்களும் உங்கள் கடனை ‘முக்கிய தவறு’ எனப் பதிவு செய்யும். இந்த வகைப்படுத்தல் உங்கள் வருங்கால கடன் மற்றும் கிரெடிட் கார்டு விண்ணப்பங்களை தடை செய்யும். இதனால் உங்கள் மீதுள்ள நம்பிக்கை காணாமல் போகும். பிற்காலத்தில் தொழில் தொடங்கவோ அல்லது வேறு ஏதேனும் அவசரத்திற்கோ கடன் பெற முடியாத சூழல் ஏற்படும்.
நீங்கள் தொடர்ந்து EMI தவறி வருகிறீர்களானால், 60 நாட்களுக்குப் பிறகு வங்கி அல்லது நிதி நிறுவனம் வசூல்துறை ஊழியர்களை உங்களை தொடர்புகொள்ள அனுப்பலாம். மேலும், Negotiable Instruments Act, 1881 படி உங்கள்மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். வங்கிகள் சட்டத்தை கையில் எடுக்கும் முன் கடன்களை அடைப்பது நன்மை தரும்.
EMI தவறியவர்களின் credit history மிகவும் மோசமாக பதிவு செய்யப்படும். இது உங்கள் வருங்கால கடன்களை பெறும் வாய்ப்பை குறைக்கும். மேலும், கிடைக்கும் கடன்கள் கூட அதிக வட்டியுடன், கடுமையான நிபந்தனைகளுடன் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தனிநபர் கடன் பெற்றுள்ளோர் அதனை கவனமுடன் செலுத்துவது நல்லது.EMI எனப்படும் மாதத்தவணை கட்டணத்தை ஆட்டோ டெபிட் மூலம் அமைக்கவும். இதனால் இஎம்ஐ தொகையை சரியான தேதியில் கட்டமுடியும். வங்கியுடன் நேரில் பேசி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மறுசீரமைப்புக்கான கோரிக்கை விடுக்கவும்.அவசர நிதி நிவாரணம் உருவாக்கி கடுமையான மாதங்களில் உதவிக் கொள்ளவும்.
பர்சனல் லோன் எடுப்பது தவறு அல்ல, ஆனால் அதன் EMI-ஐ தவறுவது நிதி சிக்கலுக்கே வழிவகுக்கும். உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாத்து, கடன் ஒழுங்கை கடைப்பிடிப்பதே நல்ல நிதி பழக்கமாகும். ஒரு மாதம் தவறு செய்தாலே உங்கள் வருங்காலம் பாதிக்கப்படும் என்பதனை மனதில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு EMI-யையும் நேரத்திற்கு முன்பே செலுத்துங்கள். இதனால் வருங்காலத்தில் கடன் பெறுவது எளிதாகும்.
பர்சனல் லோன் என்பது ஒரு தனிப்பட்ட தேவைக்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வழங்கும் காப்புறுதி இல்லாத கடன் ஆகும். இதற்கு சொத்து அடமானம் தேவையில்லை. மருத்துவ செலவு, திருமணம், பயணம், கல்வி, வீட்டு உபகரணங்கள் வாங்குதல் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். வட்டிவீதம் 10% முதல் 24% வரை இருக்கும். கடன் தொகை, வருமானம், சிஐபிஐஎல் மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும். பெரும்பாலும் 1 முதல் 5 வருடங்களுக்கு இடையில் திருப்பி செலுத்த வேண்டிய கால அவகாசம் கொடுக்கப்படும். எம்ஐ தவறினால் அபராதம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு ஏற்படலாம். சரியான திட்டமிடல் இருந்தால், பர்சனல் லோன் என்பது அவசர நேரத்தில் நம்மை காப்பாற்றும் நம்பகமான நிதி ஆதரவாக இருக்கும்.