Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் கூறிய கருத்துக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களும் காப்பி அடித்து தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய், ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபாயை 2500 ஆக உயர்த்தி தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துள்ள நிலையில், எப்போது 2500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நிதி நிலையை காரணம் காட்டி கடந்த இரண்டு மாதங்களாக கடந்த திமுக கொடுத்ததைப் போலவே ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கி வருகின்றனர். இதனிடையே 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் புதிய பயனாளிகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படுவார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கு ரேஷன் அட்டை முக்கியமாகும். ஆனால் புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த திட்டத்தில் பலருக்கும் இணைய முடியாமல் இருந்து வந்தது. புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு புதிய ரேஷன் அட்டைகளை வழங்கும் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. எனவே உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜ் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்களுக்கும், இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிறிது நேரம் மௌனமாக இருந்த அவர், “மாநிலத்தின் நிதி நிலைமை சரியில்லை, படிப்படியாக அதை சரி செய்த பின்னரே உரிமைத் தொகை வழங்க முடியும் என்று கூறினார்.
அமைச்சர் அருண்ராஜின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அமைச்சரின் இந்த கருத்தால் புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது என தெரிகிறது. மேலும் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது அமைச்சர் அருண்ராஜ் பேட்டியின் மூலம் தெரிய வருகிறது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 2500 ரூபாயை அடுத்த மாதம் முதல் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.