ஒரே இடத்தில் அதிகப்படியான சிலிண்டர்களை சேர்த்து வைப்பது, எதிர்பாராத விபத்துகளின் போது பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் கொண்டது. சிலிண்டரில் இருந்து லேசான வாயு கசிவு ஏற்பட்டால் கூட, அருகிலுள்ள மின்சார சுவிட்சுகள் அல்லது சிறிய தீப்பொறி மூலமாகப் பெரிய அளவிலான தீ விபத்துகள் நிகழக்கூடும்.
விபத்து ஏற்படும் பட்சத்தில், அங்கு அதிக சிலிண்டர்கள் இருப்பது ஆபத்தின் தீவிரத்தை பல மடங்கு அதிகரித்துவிடும். எந்தவித அனுமதியுமின்றி அளவுக்கு அதிகமாகச் சிலிண்டர்களைச் சேமித்து வைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது. இதைவிட முக்கியமாக, ஏதேனும் விபத்து நேர்ந்தால் காப்பீடு கோருவதிலும் பெரிய அளவிலான சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
பாதுகாப்பான பயன்பாட்டுக்கான வழிமுறைகள்
வீடுகளில் சிலிண்டர்களைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கு எனச் சில முக்கியமான வழிமுறைகள் உள்ளன. அவற்றை எப்போதும் நேராக நிமிர்ந்த நிலையில் மட்டுமே வைக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி படும் இடங்களிலோ அல்லது அதிக வெப்பம் உருவாகும் பகுதிகளிலோ இவற்றைச் சேமிக்கக் கூடாது.
அடுப்பு, ஹீட்டர் போன்ற வெப்பத்தை உமிழும் பொருட்களுக்கு அருகிலும், மின்சாதனப் பொருட்களுக்குப் பக்கத்திலும் எரிவாயு உருளைகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிலிண்டர் வைக்கப்பட்டுள்ள அறையில் எப்போதும் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும்.
ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய்களில் ஏதேனும் விரிசல் உள்ளதா என்பதைத் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். ஒருவேளை வாயு கசிவது போன்ற சந்தேகம் எழுந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.