What To Do If Train Is Missed : ரிசர்வ் செய்த டிக்கெட்டில் ரயிலை தவறவிட்டால் என்ன செய்வது? அந்த டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா? அல்லது பணம் ரீஃபண்ட் கிடைக்குமா? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ரயில்வே விதிகளின்படி, ஒவ்வொரு டிக்கெட்டும் ஒரு குறிப்பிட்ட ரயில், தேதி, வகுப்பு மற்றும் பயணத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். நீங்கள் முன்பதிவு செய்த ரயிலை தவறவிட்டால், அதே டிக்கெட்டில் மற்றொரு ரயிலில் பயணிக்க பொதுவாக அனுமதி இல்லை. குறிப்பாக, ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த விதி மிகவும் கடுமையானது. நீங்கள் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் அல்லது ஏசி டிக்கெட் முன்பதிவு செய்து, அந்த ரயிலை தவறவிட்டால், அதே டிக்கெட்டில் மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் அது செல்லாது. டிக்கெட் இருப்பதால் எந்த ரயிலிலும் செல்லலாம் என நினைப்பது தவறு.
ரிசர்வ் செய்யப்படாத, அதாவது ஜெனரல் டிக்கெட் விஷயத்தில் நிலைமை சற்று வித்தியாசமானது. ஜெனரல் டிக்கெட் எடுத்தவர்கள், அதே வழித்தடத்தில் செல்லும் மற்ற பயணிகள் ரயில் அல்லது ஜெனரல் கோச் உள்ள ரயில்களில் பயணிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதுவும் டிக்கெட்டில் உள்ள தேதி மற்றும் சேருமிடத்தைப் பொறுத்தது. பொதுவாக, ஒரு ஜெனரல் டிக்கெட் குறிப்பிட்ட காலத்திற்கு (சுமார் 3 மணி நேரம்) மட்டுமே செல்லுபடியாகும். எனவே, அதே நாளில் அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மற்றொரு ரயிலில் ஏறினால் சிக்கல் இருக்காது.
சில சிறப்புச் சூழ்நிலைகளில், ரிசர்வ் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். இணைப்பு ரயில் தாமதத்தால் நீங்கள் அடுத்த ரயிலை தவறவிட்டால், ரயில் நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அவர்கள் சில சமயங்களில் உதவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஒரே PNR எண்ணில் இணைப்புப் பயணம் இருந்தாலோ அல்லது ரயில்வேயின் காரணத்தால் தாமதம் ஏற்பட்டாலோ, மாற்று ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் முயற்சிக்கலாம். இருப்பினும், இது முற்றிலும் அதிகாரிகளின் முடிவைப் பொறுத்தது.
ரயில் புறப்படுவதற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால், சில கட்டணங்களைக் கழித்துக்கொண்டு ரீஃபண்ட் வழங்கப்படும். ஆனால் ரயில் புறப்பட்ட பிறகு, ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட் பொதுவாக 'நோ ரீஃபண்ட்' வகைக்குள் சென்றுவிடும். இருப்பினும், சில சிறப்புச் சூழ்நிலைகளில் TDR (Ticket Deposit Receipt) தாக்கல் செய்து ரீஃபண்ட் கோர வாய்ப்புள்ளது. ரயில் அதிக தாமதம், கோச்சில் பிரச்சினை அல்லது ரயில்வே காரணங்களால் பயணிக்க முடியாமல் போவது போன்ற சந்தர்ப்பங்களில் TDR பயன்படும்.
55
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது
ரயிலை தவறவிடாமல் இருக்க, முன்கூட்டியே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. பயணத்திற்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன்பே ரயில் நிலையத்தை அடைவது சிறந்தது. பிளாட்ஃபார்ம் எண்ணை முன்கூட்டியே சரிபார்ப்பது, ரயிலின் ஓடும் நிலையை (Running Status) செயலிகள் மூலம் கண்காணிப்பது போன்ற செயல்கள் மூலம் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.