Gift deed registration process in Tamil Nadu : சொத்துரிமை சட்டத்தின் கீழ் ஒருவருக்கு நம் சொத்தை தானமாக தர முடியும். தான பத்திரம் என்றால் என்ன? அதற்கான விதிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சொத்துரிமை மாற்றச் சட்டத்தின் படி ஒரு நபர் தனது அசையும் அல்லது அசையா சொத்தை மற்றொருவருக்கு எந்தவித பணப்பரிமாற்றமும் இன்றி மனப்பூர்வமாக வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டப்பூர்வ ஆவணமே தான பத்திரமாகும். இது கைமாறு கருகாமல் வழங்கப்பட வேண்டும். சொத்தை வழங்குவதற்கு பதிலாக பணம், நகை அல்லது வேறு எந்த பொருளையும் ஈடாக பெறக்கூடாது. எந்தவித கட்டாயமும், மிரட்டலோ இன்றி வழங்குபவர் தனது சுயநினைவோடு வழங்க வேண்டும். சொத்தை தானமாக பெறுபவர், வழங்குபவர் உயிரோடு இருக்கும் பொழுது அந்த தானத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
27
யாருக்கெல்லாம் சொத்தை தானமாக வழங்க முடியும்?
சட்டப்படி ஒரு நபர் தான் சுயமாக சம்பாதித்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் தானமாக வழங்கலாம். இருப்பினும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் இது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. தமிழக அரசின் விதிகளின்படி குறிப்பிட்ட ரத்த உறவுகளுக்குள் தானம் செய்யும் பொழுது முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் மிகவும் குறைவு. கணவன், மனைவி, தாய், தந்தை, மகன், மகள், பேரன், பேத்தி, சகோதரன், சகோதரிகளுக்குள் சொத்தை தானமாக வழங்கலாம். நண்பர்கள், தூரத்து உறவினர்கள், தொண்டு நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளைகளுக்கு ஒருவர் சொத்தை தானமாக வழங்கலாம். ஆனால் இவர்களுக்கு சொத்தை மாற்றும் பொழுது சந்தை மதிப்பில் முழுமையான முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
37
தான பத்திரம் வழங்க நிபந்தனைகள் என்ன?
ஒரு தான பத்திரம் சட்டப்படி செல்லுபடி ஆகவேண்டும் எனில் பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தானம் வழங்குபவர்களுக்கு அந்த சொத்தில் மீது முழுமையான மற்றும் தெளிவான உரிமை இருக்க வேண்டும். வில்லங்கங்கள் இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் வரப்போகும் சொத்தை (உதாரணமாக உயில் மூலம் கிடைக்கப் போகும் சொத்தை) தானம் செய்ய முடியாது. தற்போது கைவசம் உள்ள சொத்தை மட்டுமே தானமாக வழங்க முடியும். இந்திய பதிவுச் சட்டத்தின் படி அசையா சொத்துக்களை வழங்கும் பொழுது அதை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்படாத தான பத்திரங்கள் செல்லாது. தான பத்திரம் பதிவு செய்யும் பொழுது குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்தப்பட வேண்டும்.
தான பத்திரம் செல்லுபடியாக வேண்டுமெனில் பின்வரும் அம்சங்கள் அதில் இருக்க வேண்டும். தானமாக வழங்கப்படும் சொத்தின் அளவு, எல்லைகள், முகவரி ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். நான் எந்த விதமான பணப்பயனும் பெறாமல் அன்பின் அடிப்படையில் இந்த சொத்தை வழங்குகிறேன் என்ற வாசகம் அவசியம் இடம் பெற வேண்டும். பத்திரப் பதிவு செய்யப்பட்ட உடனேயே சொத்தின் முழு உரிமை தானம் பெறுபவருக்கு சென்று விடும்.
57
தான பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?
தான பத்திரம் என்பது பதிவு செய்த உடனேயே அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் அமலுக்கு வந்துவிடும். ஒருமுறை பதிவு செய்து சொத்து கை மாறிவிட்டால் அதை திரும்ப பெறுவது கடினம். முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமும் உண்டு. ஆனால் உயில் என்பது ஒருவர் மறைந்த பிறகு தான் அமலுக்கு வரும். உயில் எழுதியவர் உயிருடன் இருக்கும் வரை எத்தனை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். உயிலுக்குப் பதிவு கட்டணம் மிகக் குறைவாகும். பதிவு செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. ஒருவர் தானமாக கொடுத்த பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா என்கிற கேள்விக்கும் சட்டத்தில் விடை உள்ளது.
67
தான பத்திரத்தை ரத்து செய்வதற்கான விதிவிலக்குகள்
பொதுவாக முறையாக பதிவு செய்யப்பட்டு சொத்து பெறுபவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தான பத்திரத்தை எளிதாக ரத்து செய்ய முடியாது. ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன. பராமரிப்பு மற்றும் நலன் புரிச் சட்டத்தின் படி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்தை தானமாக எழுதி வைக்கும் பொழுது, தங்களை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் எழுதி வைத்திருந்து, பிள்ளைகள் பராமரிக்க தவறினால் தானத்தை ரத்து செய்யக் கோரலாம். மிரட்டுயோ அல்லது ஏமாற்றியோ தான பத்திரம் பெற்று இருப்பின் அதை நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய முடியும்.
77
முக்கிய குறிப்புகள்
நீங்கள் ஒரு சொத்தை தானமாக வழங்கவோ அல்லது பெறவோ திட்டமிட்டால் அந்த சொத்தின் அசல் ஆவணங்களை சரிபார்த்து வரைவு பத்திரம் தயாரிப்பது பாதுகாப்பானது. 18 வயதிற்கு உட்பட்ட மைனர் சொத்தை தானமாக வழங்க முடியாது. ஆனால் தானமாக பெறலாம் (அவரது பாதுகாவலர் மூலம்). தானமாக பெறப்படும் சொத்துக்கு அந்த ஆண்டின் வருமான வரி விதிகளின்படி செலுத்த வேண்டி இருக்கலாம் (குறிப்பாக வெளி நபர்களிடமிருந்து பெறும் பொழுது) தான பத்திரத்தில் கையொப்பமிட்டு பதிவு செய்து விட்டால் உங்களால் திரும்பப் பெற முடியாது என்பதை நினைவு கொள்ளுங்கள். அதாவது ஒருவருக்கு தான பத்திரத்தை வழங்குகிறது என்றால் அந்த சொத்தில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அர்த்தம். அதை பெறுபவர் முழு உரிமையாளர் ஆகிவிடுவார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.