Published : Mar 06, 2025, 10:09 AM ISTUpdated : Mar 06, 2025, 10:10 AM IST
Dhoni invest in SILA real estate: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சிலா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனம் ரியல் எஸ்டேட் சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. தோனியின் முதலீடு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் முன்னணி நிறுவனமான சிலாவில் (SILA) குறிப்பிடத்தக்க முதலீட்டைச் செய்துள்ளார். மார்ச் 4ஆம் தேதி அறிவிப்பு இந்த முதலீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால் எவ்வளவு தொகையை முதலீடு செய்திருக்கிறார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
கடந்த காலத்தில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் பின்னடைவைச் சந்தித்தாலும், மீண்டும் இப்போது SILA நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். தோனியின் ஆதரவுடன், இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்த SILA தயாராக உள்ளது.
சிலா (SILA) நிறுவனம் ருஷாப் மற்றும் சாஹில் வோரா சகோதரர்களால் 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நார்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் ஆதரவு பெற்ற இந்நிறுவனம் இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் 125 நகரங்களில் 200 மில்லியன் சதுர அடிக்கு மேல் ரியல் எஸ்டேட் சொத்துகளை நிர்வகிக்கிறது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு ரூ.16,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ளது. ரியல் எஸ்டேட் வசதிகளை நிர்வகிப்பது, ரியல் எஸ்டேட் ஆலோசனை ஆகிய சேவைகளையும் வழங்கி வருகிறது. தோனியின் புதிய முதலீடு SILA நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும், ரியல் எஸ்டேட் நெட்வொர்க்கை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தோனியின் குடும்ப அலுவலகம், சிலா நிறுவனர்களின் பயணத்தைப் பாராட்டியுள்ளது. இந்தியாவின் முன்னாள் ஸ்குவாஷ் வீரர்களான ருஷாப் மற்றும் சாஹில் வோரா இருவரும் தங்கள் விளையாட்டு அனுபவங்களை வணிக உலகில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"தோனியின் ஆதரவு எங்களுக்கு விலைமதிப்பற்றது. ஒரு தொழில்முனைவோராகவும் அவரது தலைமைப் பண்பில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். இதை நாங்கள் மிகப் பெரிய ஒரு பாக்கியமாகக் கருதுகிறோம்" என்று SILA நிறுவனர் சாஹில் வோரா கூறியுள்ளார். இணை நிறுவனர் ருஷாப் வோராவும் தோனியின் ஆதரவு புதிய உயரங்களை எட்டும் தங்கள் இலக்கிற்கு வலுசேர்க்கும் என்று குறிப்பிட்டார்.
தோனியின் இந்த முதலீடு அவரது தொழிலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. அதே வேளையில், இதற்கு முன்பு அம்ரபாலி குழுமத்துடன் தோனியின் தொடர்பு சர்ச்சைக்குரியதாக மாறியது. 2009ஆம் ஆண்டில், தோனி தனது ஒப்பந்தங்களை நிர்வகித்த ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் மூலம் அம்ரபாலி நிறுவனத்திற்கு ரூ.16 கோடி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், அம்ரபாலி தனது பங்களிப்பைச் செலுத்தத் தவறியதால் அந்த ஒப்பந்தம் சரிவர நடக்கவில்லை.
தணிக்கையின்போது அம்ரபாலியில் தவறான மேலாண்மை மற்றும் நிதி திசைதிருப்பல் போன்றவை நடந்திருப்பது தெரியவந்தது. இதன் விளைவாக 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அதன் உரிமத்தை நிறுத்தி வைத்தது. நிலுவைத் தொகையை வசூலிக்க தோனி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியிருந்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.