இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூரு உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை பெங்களூருக்கு டப் கொடுக்கும் வகையில் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் இருபெரும் பொருளாதார மையங்களான இந்த இரு நகரங்களை இணைப்பதற்காக 262 கி.மீ நீளமுள்ள 'சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை' (Expressway) பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சொர்க்க பூமி
இந்த விரைவுச்சாவலை ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகள் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாக மாறியுள்ளன. இதன்மூலம் இங்கு நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதாவது இந்த பகுதிகளில் நிலத்தின் மதிப்பு 35% முதல் 45% வரை உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது சென்னை மற்றும் பெங்களூரு இடையே பயணிக்க 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. இந்த புதிய விரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வந்தால் இந்த நேரம் வெறும் 2 முதல் 2.5 மணி நேரமாகக் குறையும்.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூருக்கு டிமாண்ட் அதிகரிப்பு
போக்குவரத்து எளிமையாவதால், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்கள் வெறும் தொழில் நகரங்களாக மட்டும் இல்லாமல், மக்கள் குடியிருக்க விரும்பும் 'சாட்டிலைட் நகரங்களாக' உருவெடுத்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுங்குவார்சத்திரம், மப்பேடு பகுதிகளில் நிலத்தின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இங்கு அமைந்துள்ள பாக்ஸ்கான், டாடா பவர் மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்கம், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
நிலத்தின் நிலை பன்மடங்கு உயர்வு
2024-ல் சதுர அடி ₹1,200 ஆக இருந்த பகுதிகளில், தற்போது ₹2,000 முதல் ₹2,800 வரை விற்பனை செய்யப்படுகிறது என ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம் கூறுகின்றன. இதேபோல் பெங்களூருக்கு மிக அருகில் இருப்பதால், ஓசூர் எப்போதும் முதலீட்டாளர்களின் விருப்பமான இடமாக இருந்து வருகிறது. இப்போது விரைவுச்சாலை இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
இப்போதே முதலீடு செய்யலாமா?
சென்னை, பெங்களூரு விரைவுச்சாலைக்கு அருகில் இருக்கும் மப்பேடு, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பேரிகை, சூளகிரி, மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நிலங்களில் இப்போதே முதலீடு செய்யலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நிலம் வாங்கும் முன் அது DTCP அல்லது CMDA அங்கீகாரம் பெற்றதா? விரைவுச் சாலையிலிருந்து அந்த நிலத்திற்குச் செல்ல இணைப்புச் சாலைகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.