
சாணக்கிய நீதி என்பது பண்டைய இந்தியாவில் வாழ்ந்த மாபெரும் ஆச்சாரியரான சாணக்கியரால் எழுதப்பட்ட சிந்தனைகள் மற்றும் கொள்கைகளின் தொகுப்பாகும். இந்த சாணக்கிய நீதி வாழ்க்கையை வழிநடத்தும் பல நடைமுறை பாடங்களை மக்களுக்கு வழங்குகிறது. தனிப்பட்ட நடத்தை, உறவுகள், செல்வம், அரசியல், வாழ்க்கை மேலாண்மை ஆகியவற்றில் ஆழ்ந்த நுண்ணறிவுகளை ஆராய்ந்து நமக்கு வழங்குகிறது.
அந்த வகையில் சில இடங்களுக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது அந்த இடங்களை திரும்பிப் பார்க்கக் கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அவ்வாறு அந்த இடங்களை திரும்பிப் பார்த்தால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்றும், கடுமையான துன்பங்களும் வறுமையும் ஏற்படும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். அந்த இடங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
ஒருவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் பொழுது பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. சுடுகாடு என்பது துக்கம், பிரிவு மற்றும் வாழ்க்கையில் நிலையற்றத் தன்மையை நினைவூட்டும் இடமாக கருதப்படுகிறது. அங்கிருந்து வெளியேறிய பிறகு திரும்பி பார்ப்பது என்பது கடந்த நிகழ்வுகளின் மீதான பற்றுதலை குறிக்கிறது. மேலும் மயானம் என்பது சோகமும், அதிகமான எதிர்மறை ஆற்றல்களும் நிறைந்த ஒரு இடமாகும்.
மயானத்தில் இருந்து கிளம்பும்போது திரும்பிப் பார்ப்பது என்பது அங்கு இருக்கும் சோகத்தையும், எதிர்மறை ஆற்றலையும் மீண்டும் நம்மிடம் ஈர்ப்பதற்குச் சமம். மேலும் இறந்தவர் மீதான உலகியல் பாசத்தையும், பந்ததையும் நாம் இன்னும் முழுமையாக விடவில்லை என்பதை இது குறிக்கும். எனவே மயானத்தில் இருந்து திரும்பும்பொழுது எக்காரணம் கொண்டும் திரும்பி பார்க்கக் கூடாது. மயானத்திலிருந்து நேராக வீட்டிற்கு தான் வரவேண்டும்.
ஒருவருக்கு பணத்தை கடனாக கொடுத்தாலோ அல்லது உதவி செய்தாலோ அங்கிருந்து வெளியேறும் பொழுது மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். நாம் செய்த உதவியோ அல்லது கொடுத்த பணத்தையோ நினைத்து அடிக்கடி திரும்பி பார்ப்பது என்பது, நம் மனதில் இன்னும் அந்த பணத்தின் மீதான பேராசை, சந்தேகம் அல்லது அய்யய்யோ நம் பணத்தை கொடுத்து விட்டோமே என்கிற வருத்தம் (பச்சாதாபம்) இருப்பதை காட்டுகிறது.
சாணக்கியரின் கூற்றுப்படி ஒருவருக்கு செய்யும் தானம் அல்லது உதவியை உடனே மறந்து விட வேண்டும். கொடுத்த பின்பு அதை நினைத்து வருந்துவது அந்த தர்மத்தின் பலனை குறைத்துவிடும். உண்மையான உதவி என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்பட வேண்டும். உதவி செய்த பின்னரும் அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பது உயர்ந்த மனப்பான்மை இல்லாத தன்மையை காட்டுவதாக இருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!
ஏதாவது ஒரு சட்டப் பிரச்சனை, நீதிமன்ற வழக்கு, பஞ்சாயத்து, சண்டை சச்சரவுகளை தீர்த்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறும் பொழுது மீண்டும் அந்த இடத்தை நோக்கி திரும்பி பார்க்க கூடாது என சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி சர்ச்சைக்குரிய இடங்கள் அல்லது எதிரிகளை திரும்பிப் பார்ப்பது நீங்கள் இன்னும் அந்த பகைமை அல்லது மன உளைச்சலில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதை குறிக்கிறது.
இது உங்கள் மனதில் மீண்டும் பழைய வன்மத்தையும், எதிர்மறை எண்ணங்களையும் தூண்டி உங்கள் நிம்மதியை கெடுக்கும். எனவே ஒரு பிரச்சனையை முடித்து விட்டால் அதை அங்கேயே தலைமுழுகி விட்டு, முன்னோக்கி செல்வதே புத்திசாலித்தனம் என்று சாணக்கியர் கூறுகிறார். பழைய சச்சரவுகளை மனதில் சுமந்து செல்லாமல் புதிய தொடக்கத்தை நோக்கி நகர வேண்டும் என்பதே சாணக்கியரின் அறிவுரை.
பொறாமை, வஞ்சகம், தீய எண்ணம் அல்லது அதிக சுயநலம் கொண்டவர்களுடன் பழகுவதை சாணக்கியர் தவிர்க்கச் சொல்கிறார். அப்படிப்பட்டவர்களின் வீட்டிலிருந்து அல்லது அவர்களின் கூட்டத்திலிருந்து வெளியேறும் பொழுது அவர்களை திரும்பிக் கூட பார்க்க கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
இதுபோன்ற நபர்களை அல்லது அவர்கள் வசிக்கும் வீடுகளை திரும்பிப் பார்க்கும் பொழுது அந்த நபர்களுடன் இன்னமும் மனதளவில் தொடர்பு வைத்திருப்பதன் குறியீடாக கருதப்படுகிறது. தீயவர்களிடமிருந்து எவ்வளவு விரைவாகவும் முழுமையாகவும் விலகுகிறோமோ, அந்த அளவிற்கு நமது வாழ்க்கை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்கும் என்பதே சாணக்கியரின் கருத்தாகும்.
சாணக்கியரின் இந்த அறிவுரைகள் கடந்த கால துக்கங்கள், பிரச்சனைகள் மற்றும் எதிர்மறை மனிதர்களிடமிருந்து விலகி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற உளவியல் மற்றும் வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துரைக்கின்றன. கடந்ததை பற்றி நினைத்துக் கொண்டிருப்பதை விட எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவது தான் வெற்றி மற்றும் மன நிம்மதிக்கான சிறந்த வழி என்பதை இந்த சாணக்கிய நீதி போதனையின் முக்கிய செய்தியாகும். கடந்த கால கசப்புகள், எதிர்மறை எண்ணங்கள், பேராசைகளை விட்டுவிட்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்வதே புத்திசாலித்தனம் என்பதை சாணக்கியர் இந்த அறிவுரைகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)