ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை நடத்தும் கத்தார் அணி அதன் 2வது போட்டியிலும் படுதோல்வி அடைந்தது. இன்று செனகலை எதிர்கொண்ட கத்தார் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை நடத்தும் கத்தார் அணி முதல் போட்டியில் ஈகுவடாரிடம் தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியில் செனகலை எதிர்கொண்டது.
செனகலும் கத்தாரும் மோதிய இந்த போட்டியில் 41வது நிமிடத்தில் செனகல் வீரர் பௌலை டியா முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் கத்தார் அணி கோல் அடிக்கவில்லை. எனவே முதல் பாதி முடிவில் செனகல் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 2வது பாதியில் செனகல் வீரர் ஃபமாரா 48வது நிமிடத்தில் 2வது கோலை அடிக்க, 78வது நிமிடத்தில் கத்தார் வீரர் முகமது முண்டாரி அந்த அணிக்கு முதல் கோலை அடித்து கொடுத்தார்.
இதையடுத்து 84வது நிமிடத்தில் பம்பா டியங் செனகலுக்கு 3வது கோலை அடித்து கொடுக்க, 3-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணி அபார வெற்றி பெற்றது. ஃபிஃபா உலக கோப்பையை நடத்தும் கத்தார் அணி, முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.