ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளை பார்க்க ரூ.23 லட்சத்துக்கு தனி வீடு வாங்கிய கேரள கால்பந்து ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Nov 20, 2022, 8:16 PM IST
Highlights

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை எந்த தொல்லையும் இடையூறுமின்றி பார்ப்பதற்காகவே கேரளாவில் 17 நண்பர்கள் சேர்ந்து ரூ.23 லட்சத்துக்கு ஒரு தனி வீட்டை வாங்கியுள்ளனர். அங்கு பெரிய திரையில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பதற்காக அந்த வீட்டை வாங்கியுள்ளனர்.
 

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இன்று கத்தாரில் தொடங்குகிறது. 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் இன்று முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான கால்பந்து உலக கோப்பையையொட்டி கத்தார் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மத்திய ஆசிய நாட்டில் முதல் முறையாக ஃபிஃபா உலக கோப்பை நடத்தப்படுகிறது. மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய வீரர்களுக்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஜூரம் இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கால்பந்து மீது அதிக ஆர்வம் கொண்ட கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில் கால்பந்து விளையாட்டிற்கு பிரபலமான 2 மாநிலங்கள் கேரளா மற்றும் மேற்கு வங்கம் தான். இந்த 2 மாநிலங்களில் தான் கால்பந்தாட்டம் கொண்டாடப்படுகிறது. அதிகமான வீரர்களும், ரசிகர்களும் இந்த மாநிலங்களில் தான் உள்ளனர். 

FIFA World Cup:கொல்கத்தாவில் களைகட்டும் ஜெர்சி,கொடி விற்பனை! விருப்பவீரர்களின் ஜெர்சியை வாங்க ரசிகர்கள் ஆர்வம்

ஃபிஃபா உலக கோப்பையயையொட்டி, கேரளாவில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகிய வீரர்களின் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் ஆஸ்தான வீரர்களின் கட் அவுட்டுகளை வைத்து அசத்தியுள்ளனர். மேலும் பல வீடுகளில் மஞ்சள் (பிரேசில்), வெள்ளை&நீலம்(அர்ஜெண்டினா) ஆகிய நிறங்களில் பெயிண்ட் அடித்து தங்கள் விருப்ப அணிகளுக்கு ஆதரவை காட்டியுள்ளனர்.

கொல்கத்தாவில் தங்கள் விருப்ப வீரர்களின் ஜெர்சிகள், விருப்ப அணிகளின் கொடிகளை வாங்க ரசிகர்கள் மெய்டன் மார்க்கெட்டில் குவிந்துவருகின்றனர். கடந்த ஒரு வாரமாக ஜெர்சி, கொடி விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. ஜெர்சி, ஷார்ட்ஸ் ரூ.600 முதல் ரூ.800க்கும், கொடி ரூ.150க்கும் விற்கப்பட்டுவருகிறது.

இதையெல்லாம் விட மேலாக, கேரளாவில் 17 நண்பர்கள் சேர்ந்து ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை எந்த இடையூறுமின்றி பார்ப்பதற்காக ரூ.23 லட்சத்துக்கு ஒரு வீட்டை வாங்கியுள்ளனர். மிகத்தீவிரமான கால்பந்து ரசிகர்களான இந்த 17 பேரும் கிளப் போட்டிகளைக்கூட ஒன்று விடாமல் பார்க்கக்கூடியவர்கள். 

எனவே 17 பேரும் ஒன்றாக சேர்ந்து ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளை பார்க்க திட்டமிட்டுள்ளனர். 17 பேரும் ஒரு நபரின் வீட்டில் தினமும் போட்டிகளை காண இணைவதென்பது சாத்தியமில்லாதது. எனவே 17 பேரும் சேர்ந்து ரூ.23 லட்சத்துக்கு ஒரு வீட்டை வாங்கி அங்கு பெரிய திரையில் அனைத்து போட்டிகளையும் பார்க்கவுள்ளனர்.

ஃபிஃபா உலக கோப்பை: ஒரே ஃப்ரேமில் மெஸ்ஸி - ரொனால்டோ.. நூற்றாண்டின் சிறந்த ஃபோட்டோ என கொண்டாடும் ரசிகர்கள்

அந்த வீட்டிற்கு அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுகல் அணிகளின் நிறங்களில் பெயிண்ட் அடித்து, மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோ ஆகியோரின் பேனர்களை சுற்றி வைத்து அசத்தியுள்ளனர். தங்களுக்கு பிறகு அடுத்த தலைமுறையினர் இந்த வீட்டில் கால்பந்து போட்டிகளை பார்க்கலாம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
 

click me!