
மதுபோதையில் வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்த மைத்துனரை அண்ணி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன் சலவநாய்க்கன்பேட்டையை சேர்ந்தவர் செல்வம் (50), சுற்றுலா பேருந்து ஓட்டுநர். இவரது மனைவி பராசக்தி (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செல்வம் ஓட்டுநர் வேலைக்கு சென்றுவிட்டு 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வருவாராம். இவரது தம்பி ராஜா (48), லாரி ஓட்டுநர்.
திருமணமான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ராஜா தனியாகவும், அவரது அண்ணன் குடும்பத்தினர் பக்கத்து வீட்டிலும் வசித்துள்ளனர். இந்நிலையில் ராஜா, வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து அண்ணி பராசக்திக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல், நேற்று இரவும் குடித்துவிட்டு வீடு புகுந்து பராசக்திக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பராசக்தி, அரிவாளால் ராஜாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பராசக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.