திருச்சி பெண் சிறை வார்டர் தற்கொலைக்கு இது தான் காரணமாம் !! வெளியான அதிர்ச்சி தகவல் !!

By Selvanayagam PFirst Published Feb 5, 2019, 7:10 AM IST
Highlights

திருச்சி பெண்கள் சிறை வார்டர் செந்தமிழ்செல்வியின்  காதலருக்கு நாளை திருமணம் நடைபெற இருந்ததால் மனமுடைந்த அவர்  தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடலூர் மாவட்டம் தவளக் குப்பம் அருகே பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு செந்தமிழ்செல்வி பணிக்கு வரவில்லை. சக வார்டர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

இதனால் செந்தமிழ்செல்வியின் வீட்டிற்கு வார்டர்கள் சிலர் இரவு 8 மணி அளவில் சென்றனர். அங்கு அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, செந்தமிழ்செல்வி வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டபடி பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

காதல் தோல்வியின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
 இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில்  திருச்சி மத்திய சிறை வார்டர் வெற்றிவேல் என்பவரும் செந்தமிழ்செல்வியும் கடந்த ஓராணடாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் வெற்றிவேலின் அண்ணன் கைலாசமும் அவரது மனைவியும் இவர்களது காதலுக்கு தடை விதித்தனர். மேலும் செந்தமிழ் செல்வியை சாதிப் பெயர் சொல்லி திட்டியுள்ளனர்.

மேலும் வெற்றிவேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில், தனது காதலர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்யப் போகிறாரே என மனமுடைந்த செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரது காதலன் வெற்றி வேல், அவரது அண்ணன் கைலாசம் மற்றும் அண்ணி உள்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

click me!