பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்; களத்தில் இறங்கிய மேற்கு மண்டல ஐஜி

By Velmurugan sFirst Published Sep 4, 2023, 11:32 AM IST
Highlights

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு மண்டல ஐஜி விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் புரிந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்கிற குட்டி என்பவர் செந்தில்குமாரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுநராக பணியாற்றி பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு வெங்கடேசனை பணியில் இருந்து நீக்கியுள்ளார். 

இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகே அமர்ந்து வெங்கடேசன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் மது அருந்தி உள்ளார். எதற்காக எங்களது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என செந்தில் குமார் கேட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் செந்தில்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உடனிருந்த மற்ற இரண்டு பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன்; மீட்கச்சென்ற மனைவி, உறவினருக்கு நேர்ந்த சோகம் - தேனியில் பரபரப்பு

சத்தம் கேட்டு செந்தில்குமாரின் வீட்டின் அருகே இருந்த அவரது தம்பி மோகன் மற்றும் செந்தில்குமாரின் சித்தி ரத்தினம்மாள் மற்றும் மோகனின் தாய் புஷ்பவதி ஆகியோர் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியவர்களை தடுக்க முயன்ற மூன்று பேரையும் மீண்டும் சரமாரியாக கை மற்றும் தலை பகுதிகளில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் டிஎஸ்பி சௌமியா தலைமையிலான பல்லடம் காவல்துறையினர் வெட்டுப்பட்டு உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் மற்றும் தாராபுரம், காங்கேயம், அவிநாசி மற்றும் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியோடு கொலை சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்துக்குள் மழை! 15 மணி நேரம் நனைந்தபடியே பயணம் செய்த பயணிகள் வைரலாகும் வீடியோ

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை வெட்டி கொலை செய்த நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனை முன்பு கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பல்லடம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கொலைக்கான காரணம் குறித்தும், முன் விரோதம் என்ன என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்யால் விட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பலலடம் பகுதியில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

click me!