தூத்துக்குடியில் பயங்கரம்.. பேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் மூழ்கிய தங்கையை துடிதுடிக்க வெட்டி கொன்ற அண்ணன்..!

By vinoth kumarFirst Published Jun 30, 2021, 4:11 PM IST
Highlights

கவிதா எப்போது பார்த்தாலும் போனும் கையுமாகவே இருந்திருக்கிறார். விடிய விடிய கேம் விளையாடுவது, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது அண்ணன் மாலை ராஜா அடிக்கடி கண்டித்துள்ளார். 

தூத்துக்குடி அருகே எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடந்த தங்கையை அண்ணன் கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம், பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை. விவசாயியான இவருக்கு  மாலைராஜா (20) என்ற மகனும் கவிதா (17) என்ற மகளும் உள்ளனர். கவிதா  12ம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில், கவிதா எப்போது பார்த்தாலும் போனும் கையுமாகவே இருந்திருக்கிறார். விடிய விடிய கேம் விளையாடுவது, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது அண்ணன் மாலை ராஜா அடிக்கடி கண்டித்துள்ளார். ஆனால், இதை எதையும் அவரது தங்கை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

இந்நிலையில், நேற்று மாலை கவிதா செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த அவரது அண்ணன் மாலைராஜா சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மாலை ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக தங்கை கவிதாவை வெட்டினார். இதில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்ட கவிதா ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர் அங்கிருந்து மாலை ராஜா தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மாலை ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். எந்த நேரமும் செல்போனில் மூழ்கிய தங்கையை அண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!