சொத்துக்காக தந்தையை வெட்டி கொலை செய்த மகன்..! பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து விவசாய நிலத்தில் புதைத்த மர்மம்...

By Ajmal KhanFirst Published May 22, 2022, 3:49 PM IST
Highlights

சொத்து தகராறில் தந்தையை கொன்று பிலாஸ்டிக் டிரம்மில் அடைத்து விவசாய நிலத்தில் புதைத்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். புதைத்த உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

சொத்துக்காக தந்தை கொலை

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வசித்து வருபவர் குமரேசன்(78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான இவருக்கு  குணசேகரன் என்ற மகனும், காஞ்சனமாலா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.  மூத்த மகளான காஞ்சனா மாலாவின் கணவர் இறந்து இறந்து விட்டதால் தான் தங்கியிருந்த வீட்டின் முதல் தளத்தில் தன் மகள் காஞ்சனமாலா உடன்  குமரேசன் வசித்து வந்துள்ளார்.  அவரது மகன் குணசேகரன் தரைதளத்தில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் குமரேசனுக்கு செந்தமான பல வீடுகள் உள்ளது.  இந்த வீடுகளில் இருந்து   மாதம்  தோறும் வாடகையாக 2.5 லட்சம் ரூபாய் வந்துள்ளது. மேலும் தனது ஓய்வூதியம் மற்றும் வாடகை பணத்தை  குமரேசன் தனது மகள்களுக்கே செலவு செய்து வந்துள்ள்ளார். இதனால்  தந்தை மீது மகன் குணசேகரன் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் காஞ்சனா மாலா கடந்த 15 ஆம் தேதி வெளியே சென்ற போது வீட்டில் குமரேசன் தனியாக இருந்ததுள்ளார் அந்த நேரத்தை பயன்படுத்தி சொந்த தந்தையை கொடூரமாக கொன்று உடல் பாகத்தை வெட்டி டிரம்மில் அடைத்து வைத்துள்ளார். டிரம்மில் இருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக  டிரம்மில்  உப்பினை கொட்டி மகன் குமரேசன் பதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதாக கூறி நிலத்தை பார்வையிட்டுள்ளார். 

பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்த மகன்

அப்போது வெங்கடேசனிடம் தனக்கு சூனியம் வைத்திருப்பதாகவும், அதனை மந்திரவாதியின் உதவியோடு எடுத்து பிளாஸ்டிக் டிரம்மில் அடைந்துள்ளதாகவும்  புதிதாக வாங்கும் இடத்தில் புதைக்க வேண்டும் என கூறியுள்ளார்.  இதனை நம்பிய வெங்கடேசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும்  பெருமாளின் உதவியோடு காவேரிப்பாக்கம் தஞ்சை நகரில் உள்ள வெங்கடேசனுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 19 ஆம் தேதி பட்டபகலில் டிரம்மை புதைத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தனது தந்தை வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த காஞ்சனாமாளா, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.குமரேசன் மாயமானது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டிற்கு சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியபடி அங்காங்கே ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  போலீஸ் விசாரணை மேற்கொண்டபோது  குணசேகரன் திடீரென மாயமாகியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், குணசேகரனின் மனைவியான வசந்தியிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 18ம் தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள வெங்கடேசனை சந்திக்க சென்றதாக கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் உதவியோடு வெங்கடேசன் மற்றும் பெருமாளை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், குமரேசன் தனக்கு சொந்தமான இடத்தை வாங்கி அதில் கடை கட்டுவதற்கு திட்டமிட்டதாகவும், அதற்கு முன்னதாக தனக்கு சூனியம் வைத்திருப்பதால் அதனை மந்திரவாதியின் உதவியோடு எடுத்து டிரம்மில் அடைந்துள்ளதாகவும், அதனை தான் வாங்கப் போகும் இடத்தில் புதைக்க வேண்டும் என கூறியதாகவும் இதனையடுத்து விவசாய நிலத்தில் டிரம் புகைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.  

விவசாய நிலத்தில் டிரம் புதைப்பு

இதனைத் தொடர்ந்து நில உரிமையாளர் வெங்கடேசன் மற்றும் உதவி செய்த ஆடு மேய்ப்பவர் பெருமாள் ஆகியோர்  குமரேசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட நெமிலி வட்டாட்சியர் ரவி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி சட்ட மருத்துவ மருத்துவர் மகேந்திரன் மற்றும் தீபா, காவல் ஆய்வாளர் ஆபிரகாம் புரூஸ் முன்னிலையில் புதைக்கப்பட்ட குமரேசன் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.  மேலும் இந்த வழக்கில்  தலைமறைவாக உள்ள குற்றவாளி குணசேகரனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தன்னை கவனிக்காமல் மகள்களுக்கு பணத்தை செலவிட்ட தந்தையை கொன்று பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!