குவைத்துக்கு வேலைக்கு சென்ற தமிழர் சுட்டுக்கொலை… ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் கொடூரம்!!

By Narendran SFirst Published Sep 13, 2022, 5:11 PM IST
Highlights

குவைத்துக்கு வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குவைத்துக்கு வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து குமரன். பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் கொரோனா காலத்தில் வேலை இழந்ததை அடுத்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அதில் பெரிய அளவில் லாபம் இல்லாததால் தனது 2 மகன்களையும் படிக்க வைப்பதற்கு தடுமாறி வந்தார். இதை அடுத்து வெளிநாடு சென்று பணிபுரிய முடிவு செய்த அவர், வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு சென்றார். அங்கிருந்து தனது மனைவியிடம் பேசிய அவர், தனக்கு குவைத் வேலை பிடிக்கவில்லை என்றும் ஊர் திரும்பிவிடலாமா? என்று யோசிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் 7 ஆம் தேதி முதல் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவருடன் பேச முடியாமல் அவரது மனைவி தவித்தபடி இருந்தார். இதற்கிடையே கடந்த 9 ஆம் தேதி குவைத்தில் முத்துகுமரன் மரணமடைந்து விட்டதாக வித்யாவுக்கு செய்தி வந்தது. இதனால் வித்யாவும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஐதராபாத் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதுபோல அரசு தரப்பு மூலம் முயற்சி செய்தபோதும் அதற்கு பலன் ஏற்படவில்லை.

இதையும் படிங்க: தேனியில் நேருக்கு நேர் பைக் மோதி விபத்து...! ராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேர் துடி துடித்து பலி

இதனிடையே குவைத்தில் முத்துகுமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் அங்குள்ள சபா அல்அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அவரை அழைத்து செல்லும் போது பெரிய நிறுவனம் ஒன்றில் குமாஸ்தா வேலை வாங்கி தருவதாகத்தான் அழைத்து சென்றனர். குமாஸ்தா வேலை கிடைக்காத பட்சத்தில் வீட்டில் உள்ள சிறு சிறு பணிகளை செய்யும் உதவியாளராகவும் சேர்த்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் குவைத்தில் அவருக்கு குமாஸ்தா வேலையோ அல்லது இதர உதவியாளர் வேலையோ எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக முத்துகுமரனை அந்த பகுதியில் உள்ள பணக்காரர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒட்டகம் மேய்ப்பதற்கு முத்துகுமரன் மறுத்துவிட்டார். இதனால் அவருக்கும், அவரது முதலாளிக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து முத்துகுமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். 

இதையும் படிங்க: காதல் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிகேட்ட கணவரை கழற்றிவிட்டு எஸ்கேப்.. இறுதியில் நடந்த சோகம்..!

இதனால் அந்த குவைத் முதலாளிக்கு கூடுதல் ஆத்திரம் ஏற்பட்டது. அவர் முத்துகுமரனை அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார். முத்துகுமரன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அந்த நபர் சுட்டுக்கொன்றதாக தெரிய வந்துள்ளது. குவைத்தில் இருந்து வெளியாகும் ஐமன் மேட் நியூஸ் என்ற பத்திரிகையில் 24 வயது குவைத் பிரமுகர் 30 வயது இந்திய தொழிலாளியை சுட்டுக் கொன்றுள்ளார் என்று செய்தி வெளியானது. முதலில் முத்துகுமரன் பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது. ஆனால் அந்த செய்தியில் சபா அல்அகமது பாலைவன பகுதியில் துப்பாக்கி சூடு நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏர் ரைபிள் மூலம் இந்திய தொழிலாளி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. குவைத் விசாரணை குழுவினர். தீவிர விசாரணை நடத்தியபிறகு தான் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது தமிழகத்தை சேர்ந்த முத்துகுமரன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பேசிய திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், முத்துகுமரனின் மனைவி வித்யா எனக்கு மனு கொடுத்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய அதிகாரிகளுக்கு நான் அந்த மனுவை அனுப்பி இருக்கிறேன். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

click me!