நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் கொடூர கொலை... தாமிரபரணி ஆற்றில் உடல் வீச்சு

By vinoth kumarFirst Published Nov 19, 2018, 10:48 AM IST
Highlights

நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து உடலை போலீசார் கண்டெடுத்தனர். 

நெல்லை அருகே தலை துண்டித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து உடலை போலீசார் கண்டெடுத்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக சீவலப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரது உடல் எங்கே கிடக்கிறது? என்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பாளை வீரமாணிக்கபுரம் தொம்மை மிக்கேல்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பால்துரை என்பது தெரியவந்தது. 

அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? பால்துரையின் பின்னணி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பால்துரை மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. பால்துரையின் தந்தை மற்றும் தாய் சுசீலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மாரிமுத்து வீரமாணிக்கபுரத்திலும், அவரது மனைவி சுசீலா தனது சொந்த ஊரான மேல பாலாமடையை அடுத்த ராஜவல்லிபுரத்திலும் வசித்து வந்தனர். பால்துரை தனது தாயாரை பார்க்க அவ்வப்போது ராஜவல்லி புரத்திற்கு சென்று வருவாராம். இந்த நிலையில் தாய் சுசீலாவின் உறவினர் ஒருவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. 

அந்த குழந்தையை பார்க்க நேற்று முன்தினம் சுசீலாவும், பால்துரையும் சென்று இருந்தனர். பின்னர் மாலையில் இருவரும் நெல்லையில் இருந்து ராஜவல்லிபுரத்துக்கு பஸ்சில் வந்தனர். ராஜவல்லிபுரத்தில் சுசீலாவும், பால்துரையும் இறங்கினார்கள். ஆனால் பால்துரை தாயுடன் வீட்டுக்கு செல்லாமல் வெளியே சென்றுவிட்டார். இரவில் வெகுநேரமாகியும் பால்துரை வீட்டுக்கு வராததால் சுசீலா தனது மகனை தேடியுள்ளார்.

ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பால்துரையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தலையை மட்டும் பாலாமடை கலையரங்கத்தில் வைத்துவிட்டு, தாமிரபரணி ஆற்றில் உடலை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. 

பால்துரை கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் மற்றும் கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அவரது உடல் கைப்பற்றப்பட்டது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!