
சர்ப்ரைஸ் தருவதாக கூறி தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளைஞரை மலைக்கு அழைத்து சென்று கண்களை மூடச் சொல்லி இளம்பெண் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தில் விருப்பம் இல்லை
ஆந்திர மாநிலம் அனாகபள்ளி மாவட்டம் மாடுகுலப்பள்ளி மண்டலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமாநாயுடு (28). இவர் ஐதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பி.எச்.டி படித்து வருகிறார். அவருக்கும் புஷ்பா (22) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என புஷ்பா அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் பெற்றோர் புஷ்பாவுக்கு வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
சர்ப்ரைஸ்
இந்நிலையில், மணமகனுக்கு போன் செய்து பரிசு தருவதாக புஷ்பா வரவழைத்துள்ளார். மணமகன் வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு மலையில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் இன்ப அதிர்ச்சி தரக்கூடிய பரிசு வழங்க உள்ளதால் கண்களை மூட வேண்டும் என மணமகனிடம் புஷ்பா தெரிவித்தார்.
இளம்பெண் கைது
இதற்கு ராமாநாயுடு சம்மதம் தெரிவித்தார். தன்னுடைய துப்பட்டாவால் ராமாநாயுடு கண்ணை கட்டினார். தனக்கு பரிசு கிடைக்கும் என்று ராமாநாயுடு ஆவலுடன் இருந்தார். ஆனால் புஷ்பா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமாநாயுடு கழுத்தை திடீரென அறுத்தார். ராமாநாயுடு கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து, வலியால் துடித்த அவரை புஷ்பாவே மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இதுதொடர்பாக ராமாநாயுடு அளித்த புகாரின் பேரில் புஷ்பாவை கைது செய்துள்ளனர். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாததால் இவ்வாறு செய்ததாக புஷ்பா வாக்குமூலம் அளித்துள்ளார்.