தலைதூக்கும் பெண்சிசுக்கொலை..? 3 வது முறை பிறந்த பெண்குழந்தை மர்ம மரணம்.. தலைமறைவான பெற்றோர் கைது..

By Thanalakshmi VFirst Published Dec 31, 2021, 7:16 PM IST
Highlights

மதுரை உசிலம்பட்டி அருகே பிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசு மரணம் தொடர்பாக பெற்றோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் அப்பகுதியில் விவசாயக் கூலி மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் கௌசல்யா என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே 4 வயது மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி சேடபட்டி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கெளசல்யாவிற்கு மூன்றாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. 
 

இதனிடையே சேடபட்டி ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர் ஒருவர் பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காக முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது பிறந்த வெறும் 5 நாட்களிலேயே அந்த குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர்  26 ஆம் தேதி இரவு உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை எப்படி இறந்தது குறித்து கேள்வி கேட்ட செவிலியரிடம் முன்னுக்கு பின் முரணான பதில்களை பெற்றோர் தெரிவிக்கவே சந்தேகமடைந்த கிராம செவிலியர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் தகவல் அளித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி விசாரிக்கும் போதும் முறையான பதில் இல்லாததால் இந்த சம்பவம் தொடர்பாக சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டின் அருகிலேயே பெற்றோர் குழந்தையை புதைத்துவிட்டதாக சொல்லப்பட்டதால் சந்தேகம் வலுத்துள்ளது. 

இது தொடர்பாக சேடபட்டி காவல்நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். மூன்றாவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையை கொலை செய்தார்களா அல்லது உடல்நலக்குறைவால் குழந்தை உயிரிழந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தனர். போலீசார் வருவதை தெரிந்துக்கொண்டு முத்துபாண்டி, கெளசல்யா இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து குழந்தையைப் புதைத்த இடத்தில் பெண் சிசுவின் உடலைத் தோண்டி எடுத்து அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் பெண் சிசு இயற்கையாகவே இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்துத் தெரிய வரும் என்று போலீசார் அப்போது தெரிவித்தனர். தொடர்ந்து தலைமறைவான பெற்றோரை போலீசார் தேடி வந்தனர்.

இச்சம்பவம் குறித்து பேட்டி அளித்த அமைச்சர் கீதா ஜீவன், பெண்சிசுக்கொலை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என்று கூறினார். இந்த சூழலில் கோடாங்கிநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பெற்றோர்களான முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதியை சேடபட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை உசிலம்பட்டி அருகே பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பெண் சிசு கொலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ’தொட்டில் குழந்தை’திட்டத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் பெண்குழந்தை மர்ம மரணம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தித் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

click me!