இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா..? வெளியான அதிர்ச்சி தகவல்கள்

By Ajmal KhanFirst Published Oct 25, 2022, 9:13 AM IST
Highlights

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு போல் கோவை பகுதியில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை சிலிண்டர் வெடி விபத்து

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென காரில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்ததில் ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடைபெற்ற இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற வெடி பொருட்கள் தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் "விபத்து" என நினைக்கப்பட்ட நிலையில்,  தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, அந்த இடத்தை பார்வையிட்ட பிறகு தான் சதி திட்டம் என தெரியவந்தது.

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள்.. 5 பேர் அதிரடி கைது..!

5 பேரை கைது செய்த போலீஸ்

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர் அப்போது ஜமேசா முபின் வீட்டில் இருந்து 4 பேர் மர்ம பொருளை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து கோவை பி4 உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கும் இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. 2019 இல் இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதே போல  திட்டமிட்டு அதை தீபாவளி முந்தைய தினத்தில் கொன்னியம்மன் கோவிலில் இருந்து தொடங்க திட்டமிட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தகவல்கள் கூறுகின்றன. 

கோவையில் சிலிண்டர் வெடி விபத்து..! என்.ஐ.ஏக்கு மாற்ற முடிவு..? 2 பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை..?

ஐஎஸ்ஐஎஸ் அமைப்போடு தொடர்பு

இரவு நேரத்தில் சிலிண்டரோடு வெடிபொருட்களுக்கு தேவையான ஆணிகள், கோலி குண்டுகள், கூர்மையான இரும்பு துகள்கள் கொண்டு சென்றுள்ளார். அப்போது போலீஸ் சோதனைச்சாவடியை பார்த்ததும் முபீன் தனது காரை மெதுவாக்க முயன்றார், ஆனால் அவர் தனது இலக்கை அடைவதற்கு முன்பே சிலிண்டரில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துள்ளது. தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக கடந்த 2019ஆம் ஆண்டு கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த அசாருதீன்  என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்  "கிலாஃபா ஜிஎஃப்எக்ஸ்" என்ற பேஸ்புக் பக்கத்தை பராமரித்து வந்தார், அதன் மூலம் அவர் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்து வந்துள்ளார். அவர்  இலங்கை தற்கொலைப்படை தாக்குதில் மூளையாக செயல்பட்ட  சஹ்ரான் ஹாஷிமுடன் (2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு) பேஸ்புக்கில் தொடர்பு கொண்டிருந்துள்ளார்.

தீபாவளி தினத்தில் தாக்குதல்

இந்தநிலையில் அசாருதீன் மற்றும்  ஜமேசா முபின் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இலங்கையில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் போலவே கோவை பகுதியில் தீபாவளி தினத்திற்கு முந்தைய தினத்தில் காரை வெடிக்க திட்டமிட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே கார் வெடிகுண்டு வழக்கு திட்டமிட்ட சதி என கூறப்படுகிறது. இந்த வெடி விபத்தை என்ஐஏ போலீசார் விசாரணை செய்யும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

click me!