
தென்காசி அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர் மீது மிளகாய் பொடி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏ்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா பண்பொழி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி நாச்சியார் (36). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முருகனுக்கும் செங்கோட்டை பகுதியில் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் முருகன் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த நாச்சியார், தனது கணவர் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகன் அழைத்து வந்த பெண்ணிடமும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். உடனே, அக்கம் பக்கத்தினர் சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இரவில் முருகன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவி நாச்சியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த நாச்சியார் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து முருகனின் கண்ணில் தூவிவிட்டு அங்கிருந்த கட்டையால் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது மருகன் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முருகனை கட்டையால் அடித்துக்கொலை செய்த நாச்சியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.