
காதல் திருமணங்கள் சகஜமாகி விட்ட காலக்கட்டத்தில், இரண்டு நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகன் மதுரை முத்து (வயது 30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் வேலூர் மாவட்டம், பேரணம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து இருவருக்கும் கடந்த மாதம் 16-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
மனவேதனை:
இந்த நிலையில் திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் மதுரைமுத்து மிகவும் மனவேதனையில் இருந்து உள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுரைமுத்து, வீடு திரும்பே இல்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
விசாரணை:
மேலும் காணாமல் போன மதுரை முத்துவை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் கோவளம் அடுத்த வடநெம்மெலி, கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் உள்ள மரத்தில் மதுரைமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மாமல்லபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.