50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் உதவி கமிஷனர்… கையும், களவுமாக பிடிபட்டார் !!

By Selvanayagam PFirst Published Jan 10, 2019, 8:00 AM IST
Highlights

திருச்சியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் உதவி கமிஷனரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்து  கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி நீதிமன்றம் அருகே ஹீபர் சாலையில் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் உள்ளது. அந்த வளாகத்தில் 3 உதவி கமிஷனர்கள் அலுவலகமும் இயங்கி வருகிறது. இதில் உதவி கமிஷனர் அருள்அமரன் அலுவலகமும் ஒன்று.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்தவர் சீதாராமன். ஒரு வழக்கில்  தனக்கு  சாதகமாக செயல்படுவதற்காக, உதவி கமிஷனர் அருள்அமரன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சீதாராமன், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் அருள்அமரனை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று இரவு சீதாராமன், உதவி கமிஷனர் அருள்அமரன் அலுவலகத்திற்கு வந்து, அவரிடம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அதை அருள்அமரன் பெற்றபோது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் அருள்ஜோதி, சக்திவேல் உள்பட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 10 பேர் அதிரடியாக அந்த அலுவலகத்திற்குள் புகுந்தனர். அவர்கள் உதவி கமிஷனர் அருள்அமரனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் பெற்றதாக திருச்சி போலீஸ் உதவி கமிஷனர் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!