இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் 'x வீடியோஸ்' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது
நாளை ஜூன்-1ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு இந்தப்படம் பற்றிய தகவல்களையும் படம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கான பதில்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் சஜோ சுந்தர்.
அப்போது பேசிய இவர், இயக்குனராக எனக்கு இது முதல் படம்.. இந்தப்படத்தின் மூலம் வருமானம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது.. இந்தப்படத்திற்கு நான் செலவழித்த பணம் திரும்ப வந்தாலே, அதுவே போதுமானது.. இந்தப்படத்தை பார்க்கும் மக்கள் இதன்பின்னராவது கொஞ்சம் உஷாராகி விடுவார்கள் என்றால் அதுதான் எனக்கு லாபம்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துடன் மட்டும் தயவு செய்து இந்த படத்தை ஒப்பிட வேண்டாம்.. அந்தப்படத்தை பார்ப்பதால் சும்மா சிரித்துவிட்டு போவதை தவிர வேறு என்ன லாபம் இல்லை..? ஆனால் இந்த 'x வீடியோஸ்' படத்தை பார்க்கிற ரசிகர்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலும் லாபம்.
இது ஆபாசப்படம் அல்ல.. ஆபாசத்தை பற்றிய படம்.. அசிங்கங்களை பேசுவது அசிங்கம் என் நாம் நினைத்துக்கொள்வதால் தான் நாட்டில் பல அசிங்கங்கள் நடக்கின்றன என்பதை குறிப்பிடுகிற படம் இது.. இதுவரை படம் பார்த்த அனைவரிடமும் இருந்து பாராட்டுக்கள் மட்டுமே குவிந்துள்ளன. இனி படத்திற்கான வரவேற்பு மக்கள் கையில் தான் இருக்கிறது.. அவர்கள் என் மீது கல்லெறிகிறார்களா இல்லை பூக்களை வீசுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன் என்று உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.