சூர்யாவை நோக்கி வன்னியர் சங்கம் எறியும் ஈட்டி.! E.T. பஞ்சாயத்து பத்திக்குமா? புஸ்வாணமாகுமா!

By Asianet News TamilFirst Published Mar 8, 2022, 7:05 PM IST
Highlights

வன்னியர்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரையில் அவரது எந்தப் படத்தையும் திரையிடவே கூடாது! என்பதே வன்னியர் சங்கங்களின் நிலைப்பாடு

சூர்யா நடிக்க, பாண்டிராஜ் இயக்க, சன்பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் 10-ம் தேதி ரிலீஸாகிறது. பொதுவாக சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் சூப்பர் ஹிட் லெவலில் இருந்தாலும், ஆவரேஜ் லெவலில் இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் தனது ரிப்பீடட் விளம்பரங்கள் மூலமாக வசூலை தூக்கி நிறுத்திவிடும்.

அதே ரூட்டில் இந்த படத்துக்கான ப்ரமோஷன்களையும் மானாவாரியாக துவக்கிவிட்டனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்தியாவையே உலுக்கிய தமிழகத்தின் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்தான் இந்த படத்தின் அடிப்படை லைன்! என்கிறார்கள். அது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.

சூடு பறக்கும் புரொமோஷன்

இப்படத்தின் வீடியோ, ஆடியோ ப்ரமோஷன்களில் தயாரிப்பு நிறுவனம் தட்டி கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டு தணிக்கையாளர் ஒருவரின் வாழ்த்து என்று சொல்லி தனியாக ஒரு சோஷியல் மீடியா ப்ரமோஷனையும் பரப்பி வருகின்றனர். இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை  பார்த்த ஃபாரீன் எடிட்டர் ஒருவர் இப்படத்தை  புகழ்ந்து கொட்டியுள்ளார். அதிலும் ஜெய்பீமுக்கு அடுத்து இப்படத்தில் சூர்யா கலக்கியுள்ளதாக அவர் எழுதியிருக்க, இந்த மனுஷனுக்கு எப்படி தமிழ் சினிமாவின் அத்தனை விஷயங்களும் தெரியுது! எங்கேயோ இடிக்குதே! என்று ஒரு டீம் கலாய்க்கின்றனர்.

இந்த நிலையில் சூர்யாவின் இந்தப் படத்தை திரையிட கூடாது என்று வன்னியர் சங்கத்தினர் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியுள்ளனர். ஜெய்பீம் படத்தில் போலீஸ்காரர் ஒருவரை வன்னியராக போலியாக சித்தரித்து, தங்கள் சமுதாயத்தை அசிங்கப்படுத்திவிட்டார் சூர்யா. எனவே அவர் வன்னியர்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரையில் அவரது எந்தப் படத்தையும் திரையிடவே கூடாது! என்பதே வன்னியர் சங்கங்களின் நிலைப்பாடு. இப்போது இப்படம் ரிலீஸாகும் நிலையிலும் அதே ஸ்டாண்டை எடுத்து, களமிறங்கிவிட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் அப்படத்தை ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று வன்னியர் சங்க நிர்வாகி ஓப்பனாகவே அறிக்கை கொடுத்துள்ளார் தியேட்டர் உரிமையாளர்களுக்கு.

சன் பிக்சர்ஸ் கலங்கவில்லை

ஆனால் தயாரிப்பு தரப்போ கலங்கியதாக இல்லை. தமிழகத்தை ஆளும் கட்சியான தி.மு.க. தங்களின் நெருங்கிய சொந்தமென்பதாலும், சூர்யாவின் அதிரடி நடிப்பு மீது ரசிகர்களுக்கு விருப்பம் உள்ளது என்பதாலும் கலங்காமல் இருக்கின்றனர். வன்னியர் அதிகமாக உள்ள இடங்களில் இப்படத்தை திரையிடுகையில் ஏதாவது பிரச்னை வந்தால், அதை தடுத்து, பாதுகாப்பு தர போலீஸிடம் வலுவான கோரிக்கையை வைக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், தி.மு.க.வும் பா.ம.க.வும் அரசியல் எதிரிகள் என்பதால் மிக எளிதாக ஆட்சி நிர்வாகத்தைக்  கொண்டு இந்த படத்துக்கு எதிரான செயல்பாடுகளை முடக்கிடலாம்! என நம்புகின்றனர்.

தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்டு கிடக்கும் பா.ம.க. இந்தப் பட விவகாரத்தை கையிலெடுத்து அரசியல் செய்ய நினைக்குமா அல்லது கண்டு கொள்ளாமல் விட்டுடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

இதையும் படிங்க : அடக்கடவுளே..பாக்ஸ் ஆபீஸில் படு அடிவாங்கிய வலிமை...செகண்ட் வீக்கில் இவ்ளோ தானா?..

E.T. என்று அழைக்கப்படும் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு எதிராக வன்னியர் சங்கம் எறியும் ஈட்டி குத்துமா, குறி தப்புமா?

கவனிப்போம்!

click me!