விஷாலின் சக்ரா பட வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 4, 2021, 8:13 PM IST
Highlights

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமிக்க இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனர். 

இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள சக்ரா படத்தில் விஷால் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்துள்ள இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  இந்த படத்தை பிப்ரவரி 19ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


இந்நிலையில், நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்பட்டது.  மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஆனந்தன் கூறிய அதே கதையை தற்போது நடிகர் விஷால் தனது நிறுவனத்திற்கு சக்ரா என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும், அதனால் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ஆக்சன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், இரண்டு வாரத்தில் 4 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்தி சக்ரா படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். படத்தை வெளியிட்ட இரண்டு வாரத்தில் மீதமுள்ள 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 648 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் மத்தியஸ்தரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டதால், மத்தியஸ்தர் உரிய தீர்வு காண தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அடங்கிய அமர்வு, சமரச தீர்வு குறித்தும், ரூ.1 கோடியை தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்வது குறித்து இன்று விளக்கமளிக்க உத்தரவிட்டது. 

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமிக்க இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனர். அதேபோல ஒரு கோடி ரூபாயை டிபாசிட் செய்ய விஷால் தரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து ஒரு கோடி ரூபாயை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் 14 நாட்களில் டிபாசிட் செய்து, தலைமைப் பதிவாளரிடம் ரசீது சமர்ப்பிக்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

click me!