Jai Bhim: சூர்யா கனவில் மண்ணை போட்ட வன்னியர் சங்கம்! பாவம் இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!

By manimegalai aFirst Published Nov 19, 2021, 11:58 AM IST
Highlights

'ஜெய்பீம்' (Jai bhim) படத்துக்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், அதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. எனவே இந்த படத்தை எந்த விருதுகளுக்கு பரிசீலிக்க கூடாது என வன்னியர் சங்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கும் படங்கள் பெரும்பாலும் சர்ச்சையில் சிக்குவது என்பது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், சூர்யா நடித்து அவரது 2 டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தீபாவளியை முன்னிட்டு, ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய்பீம்' படத்துக்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், அதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. எனவே இந்த படத்தை எந்த விருதுகளுக்கு பரிசீலிக்க கூடாது என வன்னியர் சங்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இதில் வில்லனாக வரும் போலீஸ் அதிகாரி, மேல் சாதியினர் போல காட்டப்பட்டிருந்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட வசனங்களும் பட்டியல் இனத்தவரை மிக மோசமாக விமசரிப்பதாகவே இருந்தது. அதோடு அந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த கட்சியின் கொடிகளும் போஸ்டர்களும் ஆங்காங்கே காட்டப்பட்டிருந்தது. போலீஸ் அதிகாரிக்கு இந்த படத்தில் வைத்திருந்த பெயர் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்ததால் தற்போது வரை இந்த சர்ச்சை முடிவில்லாமல் நீண்டு கொண்டே உள்ளது.

உண்மை நிகழ்வுகளை படமாக்கும் போது உண்மையான சித்தரிப்புகளையே சொல்ல வேண்டும் என்கிற பட்சத்தில்... சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தில் குறவர் சமூகத்தை இருளர் சமூகம் என கூறியுள்ளதும், படமாக எடுக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கூறாமல் படமாகியதாக நிஜ செங்கேணியான 'பார்வதி அம்மாள்' கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், எப்படி விமர்சனங்கள் எழுந்தாலும் இந்த படத்திற்காக பல விருதுகளை அள்ளலாம் என காத்திருந்த சூர்யாவின் கனவிலும் மண்ணை போடுவது போல் அமைந்துள்ளது, வன்னியர் சங்கம் சார்பில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீடு மனு.

இதில் கூறியுள்ளதாவது... "சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் 'ஜெய் பீம்' படத்தை  எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ,  மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயலர், தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலர் ஆகியோருக்கு  வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு இந்த மனுவை அனுப்பியுள்ளார்.

அதில், நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்தில் வன்னியர் சங்கம் மற்றும் அதன் தலைவராக இருந்து மறைந்த குரு ஆகியோரை குறிக்கும் வகையில் காட்சிகளும், கதாப்பாத்திரங்களும் அமைத்து அவதூறு பரப்பி உள்ளதாக அந்த நோட்டீசில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய பெயர்களுடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உதவி ஆய்வாளர் அந்தோனிசாமி பெயரை  குருமூர்த்தி என மாற்றியதுடன், பின்னணியில் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை அமைத்ததாக நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர். படக்குழுவினரின் இந்த செயல் அறியாமல் நடந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

என்னதான் படம் தாழ்த்தப்பட்ட கணவன் மனைவி அனுபவித்த சித்ரவதைகளை காட்டும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும்,ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை கெடுக்கும் நோக்கில் திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் எந்தவிதமான விருதுக்கோ பாராட்டுக்கோ தகுதியானது இல்லை எனவும் ஜெய் பீம் படத்தை தேசிய விருது உட்பட  எந்த வித விருதுக்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சூர்யாவின் கனவில் மண்ணை போடும் விதத்தில் உள்ளது, இந்த படத்திற்காக பல்வேறு சிக்கல்களை சூர்யா சந்தித்து வந்தாலும், இதை அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித விருதும், அங்கீகாரமும் வழங்கக்கூடாது.!

-வன்னியர் சங்கம் சார்பில் முறையீடு.! https://t.co/0Lmi10qvU4 pic.twitter.com/6Q72iwjaTn

— Balu Kaliyaperumal (@PMKAdvocateBalu)

click me!