ஷுட்டிங் ப்ளான் ரெடி! மீண்டும் வைபவ்வுடன் கூட்டணி சேரும் பிரபல இயக்குநர்! ஹீரோயின் யார் தெரியுமா?

By Selvanayagam PFirst Published Nov 21, 2019, 9:15 PM IST
Highlights

'பீட்சா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் திரையுலகின் கவனம் ஈர்த்தவர் கார்த்திக் சுப்புராஜ். அதன்பின்னர், 'ஜிகர்தாண்டா', 'இறைவி', 'மெர்குரி' ஆகிய தரமான படங்களை இயக்கிய அவர், 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ளார். 
 

தற்போது, தனுஷ் ஹீரோவாக நடிக்கும் 'டி-40' படத்தை இயக்கிவரும் கார்த்திக்சுப்புராஜ், படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
வைபவ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'மேயாத மான்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த கார்த்திக் சுப்புராஜ், தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் மெர்குரி படத்தை இயக்கி தயாரித்தார். இந்தப் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 


இதனையடுத்து, 'தேசிய விருது' நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பெண்குயின்'  படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம், 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீசாகவுள்ளது.

இதனிடையே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். 

இது, ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 4-வது படமாகும். ஹாரர், திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை ரதிந்திரன் ஆர்.பிரசாத் இயக்குகிறார். 

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச்  ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 5-வது படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய படத்தில், வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். 

இந்நிறுவனத்தின் முதல் படமான மேயாத மானுக்குப் பிறகு, மீண்டும் வைபவ்வுடன் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி சேர்ந்துள்ளார்.  வைபவ்வுக்கு ஜோடியாக நட்பே துணை பட நடிகை அனகா கமிட்டாகியுள்ளார்.


இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக இருந்த அசோக் வீரப்பன் இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை (நவம்பர் 22) காரைக்குடியில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

click me!