ஒரு குவாட்டர் கொடுத்தால் போதும்... அந்த விஷயத்தில் அதிமுகவும், திமுகவும் ஒண்ணுதான்... பதற வைத்த கஸ்தூரி..!

By Thiraviaraj RMFirst Published Jun 26, 2019, 4:33 PM IST
Highlights

மதுவிலக்கை அமல்படுத்தாமல் ஊக்கப்படுத்துவதில் அதிமுகவும், திமுகவும் ஒன்று தான் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கை அமல்படுத்தாமல் ஊக்கப்படுத்துவதில் அதிமுகவும், திமுகவும் ஒன்று தான் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ’’ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கையை மது சின்னாபின்னப்படுத்திவிட்டது. சமூக ஆர்வலர், மக்கள் சேவகர், எல்லாவிதத்திலும் நல்லவர்... கோவை மருத்துவர் ரமேஷ். எந்தவகையிலும் சறுக்காதவர் வாழ்க்கையில் சரக்கு விளையாடிவிட்டது.
 
என்ன செய்தார் அவர்? குடித்து தன்னை தானே அழித்துக்கொண்டாரா என்றால் இல்லை. டாஸ்மாக்கில் தண்ணியடித்துவிட்டு இரு பொறம்போக்குகள் மோட்டார் பைக்கை அந்த நல்லவரின் மனைவி மகள் மீது ஏற்றிவிட்டனர். மனைவி அங்கேயே உயிரிழந்தார். மகள் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்க, தகப்பனோ அந்த இடத்திலேயே மதுவுக்கு எதிராக போராட செய்தியை படித்த நமக்கு பதறுகிறது. தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் டாக்டர் ரமேஷின் நிலை அவர் தலையெழுத்து என்றோ ஒரு தற்குறியின் தவறு என்றோ கடந்து போய் விட முடியாது. இது தமிழகத்தின் தலைகுனிவு. திராவிட அரசுகளின் தனிப்பெருமை.

இன்னும் எத்தனை டாக்டர் ரமேஷ் இறந்த மனைவியின் சவத்துடன் தெருவில் உட்காரவேண்டும்? இன்னும் எத்தனை சசி பெருமாள்கள் உயிர் தியாகம் செய்ய வேண்டும்? எவ்வளவு ரத்தம் குடித்தால் தெளியும் தமிழனின் சிந்தை? "குடிப்பது தனிமனித உரிமை, தனிப்பட்ட விருப்பம், நீ யார் தலையிட?... " என்னது, உரிமையா ? தனிமனித சுதந்திரமா? ஒரு தனிமனிதன் குடித்தால் அவனுக்கு மட்டுமா தீங்கு? நாட்டுக்கும் வீட்டுக்கும் எவ்வளவு கேடு! மது சமூக சீர்கேட்டின் முதன்மை தூண். மதுவுக்கு அடிமையானவர் தங்கள் உடலை மட்டும் அழித்துக்கொள்ளவில்லை. தங்களை நம்பிய குடும்பத்தினரை, குழந்தைகள் எதிர்காலத்தை, அவரை பொறுத்துக்கொள்ளும் சமூகத்தை, அவரை தாங்கும் தேசத்தையே நாசம் செய்கிறார்.

"தமிழக கஜானா மதுவை நம்பித்தானே இருக்கிறது"....ஓஹோ! 'குடி'மகன்களால் அரசுக்கு வருமானமா? ஒரு குடிகாரனால்- குடிக்கும் செலவு, வேலையில் சொதப்பி முதலாளிக்கும் நுகர்வோருக்கும் பொருளாதார இழப்பு, அவன் குடல் வெந்து விழும்போது இலவச சிகிச்சை. அவன் அம்போவென்று விடும் மனைவிக்கு அவசர சிகிச்சை, பசியில் வாடும் பிள்ளைகளுக்கு சத்துணவு, படிப்பு, ஒரு நாள் அவன் மண்டையை போட்டால், அனாதை குழந்தைகளின் எதிர்கால பேரிழப்பு... இதற்கெல்லாம் என்ன விலை?


 
திருட்டும் தீமைகளும் குற்றங்களும் அதிகரிக்க அதிகரிக்க, அப்பாவி மக்களுக்கும் வரிக்கட்டும் நல்லவர்களுக்கும் காபந்து, கட்டடம், இன்சூரன்ஸ், செக்யூரிட்டி, போலீஸ், நீதிமன்ற செலவு... இதற்கான விலையெல்லாம் கணக்கு பார்த்தால்? இப்போதே பல வீடுகளில் பெற்ற குழந்தைகளுக்கு உணவில்லை, படிப்பில்லை, குழந்தைப்பருவம் இல்லை. இன்னும் போகப்போக ஊரில் மற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, உயிருக்கும் உடைமைக்கும் உத்திரவாதம் இதெல்லாம் சுத்தமாக அழியும் அபாயம் நெருங்குகிறது. கணக்கு போட்டு பார்த்தால்... மதுவால் அரசுக்கு வருமானமா, அவமானமா?

ஆனாலும் திராவிட அரசுக்கள் மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவை கெட்டியாக பிடித்துக்கொள்வது ஏன்? ஏனென்றால்... மதுவால் அரசுக்கு வருமானம் என்பதை விட, அரசியல்வாதிகளுக்கு அளவிலாத லாபம் என்பதே உண்மை. தமிழ்நாட்டின் போதை சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் அரசியல்புள்ளிகள், அதிகாரிகள், குறிப்பாக திராவிட இயக்கத்தினர், நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத நிஜம்.

அரசியலில் எதிரும் புதிருமாக உதார் காட்டுபவர்கள் இங்கு வியாபாரத்திலும் கையூட்டிலும் பங்காளிகள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா? அதைவிட முக்கியம், திராவிட அரசியலின் மிக பெரிய ராஜதந்திரம் மதுதான். அதை வைத்துதான் மக்களை வறுமையில் அறியாமையில் உழலும் சிந்திக்கவே இயலாத ஆட்டுமந்தை கூட்டமாக அடிமைப்படுத்தி வைத்து உள்ளார்கள். குவார்ட்டர் குடுத்தால் போதும். ஓட்டையும் வீட்டையும் நாட்டையும் விற்றுவிடுவான் தமிழன் என்ற நிலையில் வைத்துள்ளார்கள்.
 
அந்த இறுக்கமான பிடியை தளர்த்த என்றுமே விரும்ப மாட்டார்கள். அதனால்தான் நம் திராவிட தலைவர்கள் மத்திய அரசை எதிர்ப்பார்கள்- நம் மத்தியில் உள்ள மது அரக்கனை எதிர்க்கவேமாட்டார்கள். பலகை மொழியை அழிப்பார்கள், படுகுழியை ஒழிக்கமாட்டார்கள். குடிச்சு குடிச்சு குடல் வெந்து சாகட்டும்...பெற்ற குழந்தைகளை பட்டினி போடட்டும், குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கட்டும், கட்டின பொண்டாட்டியை அடிக்கட்டும் கொல்லட்டும் , இப்பொழுது அடுத்தவன் குடும்பத்தையும் இடிக்கட்டும் கொல்லட்டும். இந்த நாடும் மக்களும் நாசமாய் போகட்டும். அவங்க பாக்கெட்டு நிறைஞ்சால் சரி என்றே நமது அழிவை ரசிப்பார்கள். தலைமையை நம்பி தமிழன் தடுமாறியது போதும். தெளிந்திடு தமிழா தெளிந்திடு!'' ’’ என அவர் பதிவிட்டுள்ளார்.
 

click me!