ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரீக அரசியலை வெறுக்கிறேன்..! தமிழருவி மணியன் பரபரப்பு அறிக்கை!

By manimegalai aFirst Published Feb 2, 2021, 3:23 PM IST
Highlights

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்படம் தமிழருவி மணியன், ரஜினி மீண்டும் அரசியலுக்கு வந்தால், அவருடன் சேர்ந்து பயணிக்க விரும்புவதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
 

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக செயல்படம் தமிழருவி மணியன், ரஜினி மீண்டும் அரசியலுக்கு வந்தால், அவருடன் சேர்ந்து பயணிக்க விரும்புவதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, "காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன், தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன். 

நீங்கள் அனைவரும் ரஜினி ஒரு நாள் அரசியல் காலத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர்வார் என்ற கனவிலும், அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கை பூச்சு இல்லாதா பேச்சு, ஆணவத்திற்கு சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டத்தை ஒளிவு மறைவு இன்றி உரைக்கும் நேரம்மை, மிக சாதாரணமாக மனிதனாகத் தன்னை பாவிக்கும் பண்பு நலன், அனைவரும் வியர்ந்து பார்க்கும் ஆடம்பரமற்ற எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர் குணம் ஆகியவற்றில் உங்கள் மனதை பறிகொடுத்து தான் நீங்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களாக மாறினார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அவருக்காக எதையும் இழக்க துணியும் உங்கள் உயரிய அர்ப்பணிப்பை கடந்த நான்கு ஆண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்கிறேன்.

பாழ்பட்ட அரசியலை பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். கால சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம்தராத நிலையில் இப்போது அவர் கட்சி துவங்குவதை தவிர்க்கிறார். நான் எப்பொழுதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவது இல்லை என்றும், அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் களைத்து விடவும் இல்லை.

இந்த நிலையில் அவருடைய கூற்றின் படி சிஸ்டத்தை சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரணடைந்திருப்பதையும், சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாயுவதையும் கண்டு நான் வருந்துகிறேன். ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரீக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாத என்று உறுதிபட அறிவிக்கிறேன்.

காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தில் சகோதர அமைப்பாக தொடர்ந்து செயல்படும். அவரவர் வீட்டில் இருந்தபடி கரங்கள் இணைந்து காரியமாக்குவோம். நான் "ஒரு காந்தியவாதி இறக்கும் நாள் வரை இடையறாமல் தன்னலமின்றி சமூக நலன் சார்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இழிந்த விமர்சனங்களை விம்மியும் பொருட்படுத்துதலாகாது. மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் பணியில் நீங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்." என்று சான்றாண்மை மிக்க மூத்தோர் பலர் வழங்கிய அறிவுரையை ஏற்கிறேன்.

தரம் தாழ்ந்து தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தியது இல்லை. எந்த லாவணி கச்சேரியிலும் ஒரு நாளும் நேரத்தை விரையமாக்காமல் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பணிகளில் காந்தி மக்கள் இயக்கம் முன்னிலும் முனைப்பாக ஈடுபடும். 

மார்ச் 7 ஆம் நாள் திருப்பூரில் பொதுக்குழு கூட இருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்தி பூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும், எவர் விரிக்கும் வலையிலும் சிக்க மாட்டார்கள் என்பது உறுதி. என தமிழருவி மணியன் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார். 

click me!