#BREAKING கதை திருட்டு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதா?... இயக்குநர் ஷங்கர் அதிரடி விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 1, 2021, 9:37 PM IST
Highlights

ஆனால் தனக்கு எவ்வித பிடிவாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். 

​1996ம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் பத்திரிக்கையில் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா என்ற கதை வெளியானது. அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில்  2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "எந்திரன்" திரைப்படம் வெளியான பின்பு தான் ‘ஜுகிபா’ கதை திருடப்பட்டு, எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் ஷங்கர் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். 

இதுதொடர்பான வழக்கு எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தாங்கள் கதையை திருடவில்லை என்றும், இந்த கிரிமினல் வழக்கு செல்லாது என்றும் முறையிட்டனர். இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில்,  கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று  உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது கொரோனா பிரச்சனைகள் முடிவுக்கு வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக  இந்த வழக்கில் நேரில் ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தனக்கு எவ்வித பிடிவாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.எனது வழக்கறிஞர் திரு.சாய் குமரன், நீதிமன்றத்தை இன்றுஅணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார். இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது, அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. 

சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நலம் விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது. இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என்று தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

click me!