விட்டுக்கொடுக்காத விஜய்... தமிழக அரசுக்கு பறந்த நோட்டீஸ்... நீதிமன்றத்தில் முன்வைத்த அதிரடி வாதங்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 27, 2021, 1:27 PM IST
Highlights

சொகு கார் இறக்குமதி வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை தென் சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். அப்போது தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த நுழைவு வரித் தொகை அதிகமாக உள்ளதால், வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நுழைவு வரித் தொகையில் 20 சதவீதத்தை செலுத்திவிட்டு காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து, ரூ.1 லட்சம் அபராதம் (வழக்குச் செலவு) விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயண், நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. அந்த உத்தரவை மதிக்கிறோம். நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் 
நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதம் விதித்தது, மனுதாரர் குறித்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும். 

தனி நீதிபதியின் உத்தரவு நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில்  உள்ளது.  இதே கோரிக்கையுடன் பலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மனுதாரரான நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.  தனி நீதிபதி மனுதாரரை தேச விரோதியாக குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த கருத்துகளை நீக்க வேண்டும். வழக்கு தொடர்ந்த போது நுழைவு வரி வசூலிக்க கூடாது என்ற  உயர் நீதிமன்ற உத்தரவுகள் அமலில் இருந்ததால் வழக்கு தொடரப்பட்டது.


எனவே தனி நீதிபதியின் உத்தரவில் இடம்பெற்றுள்ள கருத்து மற்றும் அபராதத்தை நீக்க வேண்டும். வணிக வரித்திறையினர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டாலும் அதனை  7 முதல் 10 நாள்களுக்குள் செலுத்த தயாராக இருப்பதாக வாதிட்டார். அப்போது அரசுத் தரப்பில், தனி நீதிபதியின் விமர்சனம் மற்றும் அபராதம் குறித்து  தெரிவிக்க எதுவும் இல்லை. நுழைவு வரியை கணக்கிட்டு கூறுவதாகவும், கடந்த 2012 -ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி  ஏற்கனவே செலுத்தியுள்ள 20 சதவீதம் போக எஞ்சியத் தொகையை செலுத்தினால் போதும் என வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.  ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, எஞ்சியுள்ள 80 சதவீதத்தை ஒரு வாரத்துக்குள் நடிகர் விஜய் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,  விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 
 

click me!