உலக பட்டினி தினம்! 234 தொகுதி.. 5 மாநிலத்தில் தளபதியின் உத்தரவை செயல்படுத்தும் ரசிகர்கள்! அதிரும் அரசியல் களம்

By manimegalai aFirst Published May 25, 2023, 6:52 PM IST
Highlights

உலக பட்டினி தினத்தை அனுசரிக்கும் விதமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம், பட்டினி தினத்தன்று, மக்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
 

அன்றே மகாகவி பாரதியார், "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார்" இதனை முன்னெடுக்கும் விதமாகவும், ஒருவர் கூட பசி பட்டினியால் வாட  கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பசி தினம் (அல்லது) உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மனிதன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு 2100 கலோரி உணவு உட்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், தற்போது வரை வறுமை நிலையால்... பசியால் வாடும் பலர் இருந்து கொண்டு தான் உள்ளனர்.  இதற்கு தீர்வு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையிலும், பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பட்டினி தினத்தை அனுசரிக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது... "உலகம் முழுவதும் மே 28ஆம் தேதி அன்று, உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் நீண்ட கால பட்டினியால் வாழும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி பிணியை போக்கிடும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை இயக்கம் திட்ட மூலம், வருகின்ற 28 5 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணி அளவில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு வேலை மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியை போக்கும் விழிப்புணர்வை, சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் இந்த நலப் பணியை நலப்பணி செயல்படுத்துகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர அரசியலில் இறங்கும் முன்பே... தளபதி விஜய் இதுபோன்ற தரமான உத்தரவால், அரசியல் வாதிகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறாரா? என அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

click me!