தாய்க்கிழவின்னு சொல்லி இளைய சமுதாயத்தை ஏன் சீரழிக்கிறீங்க.? திருச்சிற்றம்பலம் தனுஷ்க்கு கிளம்பிய எதிர்ப்பு!

By Asianet TamilFirst Published Jun 26, 2022, 11:00 PM IST
Highlights

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடிகர் தனுஷ் எழுதி பாடியுள்ள ‘தாய்க்கிழவி’ எனும் பாடலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவைப் பற்றி பேசும் இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, நடிகைகள் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள். தனுஷ் படத்துக்கு நீண்ட நாள் கழித்து அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘தாய்க்கிழவி’ என்ற பாடல் அண்மையில் வெளியானது.

’தாய்க்கிழவி’ பாடலை நடிகர் தனுஷே எழுதி, பாடியும் உள்ளார். கடந்த 1994-ஆம் ஆண்டில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘நாட்டாமை’ படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்த நடிகர் பொன்னம்பலம், நடிகை மனோரமாவை தாய்க்கிழவி என்று அடிக்கடி சொல்லி அழைப்பார். இந்தப் படத்தின் மூலம்தான் ‘தாய்க்கிழவி’ என்று சொல் பிரபலமானது. அதை வைத்துதான் இந்தப் பாடலை தனுஷ் உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அப்பாடலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

இதையும் படிங்க: 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது முதல் ஹீரோவுடன் மீனா!

இச்சங்கத்தின் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதுதொடர்பாகப் பதிவிட்டுள்ளார். அதில், “வயதான உறவுகளை தாத்தா, பாட்டி என மரியாதையோடு முறை சொல்லி அழைத்து மகிழ்ந்த காலம் போய், தற்போது அதனை இந்த தலைமுறை சீரழிக்கும் வகையில் கிழவி, தாய்க்கிழவி எனும் தரக்குறைவான வரிகளைக் கொண்டு ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக, பாடல் எழுதி பாடி, நடிகர் தனுஷ் தவறான முன்னுதாரணமாகி இருக்கிறார். வளரும் தலைமுறையினர் மத்தியில் மூத்த வயதான உறவுகளை தவறாக அழைக்கும் எண்ணத்தை விதைக்கும் கிழவி, தாய்க்கிழவி எனும் வரிகளை உடனடியாக நீக்கிவிட்டு பாடலை வெளியிட வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வலியுறுத்துகிறோம்” என பொன்னுசாமி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அட வாரிசு-ல டபுள் ட்ரீட் இருக்காமே..குஷியில் விஜய் ரசிகர்கள்..

ஏற்கெனவே அஜித் படம் வெளியாகும்போது அவருடைய ரசிகர்கள் பாலை திருடுவதாகப் பொன்னுசாமி புகார் கூறி பரபரப்பை கிளப்பினார். கட் அவுட் வைத்து பாலாபிஷேம் செய்யும் ரசிகர்களை நல் வழிப்படுத்தாத நடிகர் விஜய்க்கு எதிராக போலீஸில் புகார் அளித்தவர்தான் பொன்னுசாமி. தற்போது தனுஷ் எழுதியுள்ள ‘தாய்க்கிழவி’ பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாமனிதன் படத்தின் லட்சணம் இன்னும் சில தினங்களில் தெரியும்.? பிரபல இயக்குநரை விடாமல் வச்சு செய்யும் ப்ளூ சட்டை

click me!