தெலுங்கு மக்கள் இல்லைனா தமிழ்நாடு இல்ல.. வெறுப்பை கக்கும் ராதாரவி!!

By Asianet TamilFirst Published Sep 22, 2019, 2:25 PM IST
Highlights

தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை என்றும், நான் தமிழன் என்று சொல்வதே வீண் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அமைச்சரவை அமைப்பதற்கு பெரும்பங்கு வகிப்பது தெலுங்கு இனம் தான். தேனி, திண்டுக்கல், சிவகாசி, விருதுநகர் போன்ற பகுதிகளில் தெலுங்கு மக்கள் தான் போட்டி போடுகிறார்கள். தெலுங்கு இனத்தை ஆதரிப்பவர்கள் தான் தமிழ்நாட்டில் வென்றிருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் இல்லை என்றால் மதுரை வளர்ந்திருக்காது.

நாங்கள் திராவிடம் என்கிறோம். நீங்கள் எங்களை வேறு இனம் என்று கூறுகிறீர்கள். நான் திராவிட தெலுங்கன். ஆந்திரா, தெலுங்கானா என்ற இரண்டு மாநிலங்களில் தெலுங்கு முதல்வர்கள் ஆள்கிறார்கள். நமக்கு மோடியிடம் நல்ல ஆதரவு இருக்கிறது.

தமிழகத்தில் கல்லூரிகள், தொழிற்சாலைகள், உரிமையாளர்களாக அதிகம் தெலுங்கு பேசும் மக்கள் தான் இருக்கிறார்கள். கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்தவர் நடிகர் எம்.ஆர் ராதா. திராவிட இயக்கம் என்று பெயர் வைத்து ஏமாற்றுபவர்கள் மத்தியில் 39 ஆண்டுகளாக இந்த விழா நடைபெற்று வருகிறது. நடிகர் எம்.ஆர் ராதாவை திராவிட இயக்கங்கள் மறந்துவிட்டது.

தெலுங்கை  தெலுங்கு காரன் தான் கொண்டாடனும். இனி தமிழன் என்று சொல்லிக் கொள்வதே இங்கே வீண். தெலுங்கு கூட்டமைப்பு சார்பாக ஒன்றாக சேர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தெலுங்கு இனத்தை காக்க கோரிக்கை வைக்க உள்ளோம். முதல்வரை சந்தித்து தெலுங்கு மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை முறையிடுவோம்.

இனத்தை பற்றி தவறாக பேசுபவர்கள் முதலில் அவர்கள் யார் என்பதை திரும்பிப் பார்க்கவேண்டும். நாங்கள் திராவிடர்கள். திராவிடத்தை வைத்து பேசுகிறோம். தெலுங்கை விலக்கி வைத்து யாரும் பார்த்திட முடியாது. தெலுங்கு மக்கள் இல்லை என்றால் தமிழகத்தின் ஒரு பகுதிக்கு வேட்பாளர்கள் இருக்க மாட்டார்கள். மிக விரைவில் பிரம்மாண்டமாக தெலுங்கு மாநாடு நடைபெறும்.

இவ்வாறு நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

click me!