திரையுலகில் அனைவர் மனதிலும் தனது நடிப்புத்திறமையால் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ரகுவரன். அவரது பிரிவு இன்றளவும் நம்ப முடியாத ஒரு சம்பவமாகவே அவரது ரசிகர்கள் மனதில் இருக்கிறது. ரஜினிக்கே வில்லனாக பாட்ஷாவில் கலக்கி இருந்த அவரது நடிப்பு, யாராலும் மறக்க முடியாதது.
இவரது மனைவியும் பிரபல நடிகையுமான ரோகிணி, சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களின் செயல் பற்றி வருத்தப்பட்டு கூறிய விஷயம், ரசிகர்களுக்கும் வருத்தத்தை அளித்திருக்கிறது.
ரகுவரன் மரணத்தின் போது பத்திரிக்கையாளர்கள் உள்ளே வந்து புகைப்படம் எடுக்க முயன்ற போது , வீட்டின் உள்ளே வந்து யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். அப்போது சரி என கூறிவிட்டு, நான் என் மகனுடன் உள்ளே வந்த பிறகு, அனைவரும் அங்கு வந்துவிட்டனர். இந்த செயல் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது.
அதை தொடர்ந்து சிலவருடங்களாக நான் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதில்லை. இப்படி ஒரு சூழலில் கூட அவர்கள் புரிந்து கொள்ளாமல் நடந்ததை என்னவென்று சொல்வது? என அந்த நிகழ்ச்சியின் போது நொந்திருக்கிறார் ரோகிணி